4 ஆம் வகுப்பு மாணவியிடமிருந்து வந்த போஸ்ட் கார்டு.. நெகிழ்ச்சியுடன் கலெக்டர் எழுதிய பதில் கடிதம்.. வைரல் பின்னணி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனக்கு நன்றி தெரிவித்து நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் கடிதம் எழுதிய நிலையில் அதற்கு பதில் கடிதம் எழுதி இருக்கிறார் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர்.

Also Read | ரோட்ல தலைகீழா ஓடிய கார்.. அலறிய பொதுமக்கள்.. அப்புறம் தான் விஷயமே தெரிஞ்சிருக்கு.. உலக வைரல் வீடியோ.!
பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட வாரியாக புத்தகக் காட்சி நடைபெறும் என தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்த வகையில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் முதலாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், புத்தக பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இது பொது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் சின்னா ரெட்டி பெட்டியில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் படிக்கும் நான்காம் வகுப்பு மாணவி காவிய தர்ஷினி. இவர் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு போஸ்ட் கார்டில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் "விருதுநகர் முதலாம் ஆண்டு புத்தக திருவிழாவில் மகத்தான சாதனை படைத்த உயர்திரு. மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் மற்றும் தங்களோடு பணியாற்றிய அனைவருக்கும் எங்களுடைய அன்பான வாழ்த்துக்கள்" என அந்த மாணவி குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில் மாணவி எழுதிய கடிதத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் மேகநாத ரெட்டி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் "முதலாவது விருதுநகர் புத்தகத் திருவிழா குறித்த தங்களது வாழ்த்து மடல் கிடைக்கப்பெற்றது. மிக்க மகிழ்ச்சி. மாணவச் செல்வங்களாகிய நீங்கள் உங்களுக்கான லட்சியம் ஒன்றை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். அதை அடைய முயற்சிக்கும் போது வரும் தடைகளை விடாமுயற்சியுடன் எதிர்கொண்டு லட்சியத்தை அடைந்து வாழ்வில் வெற்றி பெற்று சந்தோஷமாக இருங்கள். அனைவருக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டு இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் துடிப்புடன் இயங்கி வரும் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் மழைக்காலங்களில் மாணவர்களுக்கு வழங்கும் அறிவுரைகள் எப்போதும் வைரலாவது உண்டு. அந்த வகையில் சமீபத்தில், மாணவர் ஒருவர் மழையின்போது பள்ளிக்கு விடுமுறை கேட்டதற்கு, "பாலே இங்க தேறல.. பாயாசம் கேட்குதா.." என்று பதிலளித்து இருந்தார். இதேபோன்று மற்றொரு மாணவரின் கேள்விக்கு, நாளை பள்ளிக்குச் செல்ல சைக்கிளை தயாராக வைத்திருங்கள் என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
