கணவர் பப்ஜி மதனை பத்திரமா பாத்துக்க சொன்ன கிருத்திகாவிடம் அதிகாரியின் சர்ச்சை பேச்சு.. வெளியான சென்சேஷனல் ஆடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: சிறைக்குள் வசதிகள் செய்ய பப்ஜி மதனின் மனைவியிடம் 3 லட்சம் லஞ்சம் கேட்கும் சிறைத்துறையினர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

யூ டியூப் சேனல்களை தொடங்கி அதன்மூலம் பிரபலமானவர் மதன். இவர் மதன், மதன் 18+, பப்ஜி மதன் உள்பட பல்வேறு சேனல்களை நடத்தி வந்தார். இந்த யூடியூப் சேனல்கள் மூலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் மனதளவில் பாதிக்கப்படுவதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது. இதனையடுத்து, பெண்கள் குறித்து இழிவாக பேசி தடைச்செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விளையாடியதாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
குறிப்பாக இவர் மீது பல புகார்கள் வந்ததால் குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த பப்ஜி மதனுக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் உடல் நிலை பாதிக்கப்பட்டதால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் திடீரென பப்ஜி மதனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிறையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். அப்போது பப்ஜி மதனை கவனிக்க வேண்டுமென்றால் 3லட்சம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என மதனின் மனைவி கிருத்திகாவிடம் சிறை பணியாளர் ஒருவர் கேட்கும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் ரூபாய் 3 லட்சம் அதிகமாக தொகை என்பதால் சொந்த ஊரான சேலத்தில் தயார் செய்து கொண்டிருப்பதாகவும், சில நாட்களில் கொடுத்து விடுவதாகவும், மதனை பத்திரமாக தனிமைப்படுத்தி பார்த்து கொள்ளுமாறு கிருத்திகா சிறை பணியாளரிடம் பேசுவது போல் பதிவாகி உள்ளது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவுவதால் டிஜிபி சைலேந்திரபாபு சம்மந்தப்பட்ட சிறை பணியாளரை துறை ரீதியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதே போல சிறைத்துறை லஞ்ச ஒழிப்பி போலீசார் விசாரணை நடத்தவும் முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே சிறைகளில் கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக அதிகளவு புகார்கள் டிஜிபிக்கு வருவதால் திடீர் சோதனையானது மேற்கொள்ளப்பட்டு செல்போன், போதை பொருட்கள் பறிமுதல் செய்வது வழக்கமாக இருந்து வருகின்றன. ஏற்கனவே முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மற்றும் கர்நாடகா சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்வதாக எழுந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் கைதிகளின் உறவினர் மற்றும் மனைவிகளிடம் சிறை பணியாளர்கள் பணத்தை பெற்றுக்கொண்டு சொகுசு வாழ்க்கைக்கு ஏற்பாடு செய்து தரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
