"ஜெயலலிதா என்னும் நான்..." "மக்களால் நான் மக்களுக்காக நான்..." 'இரும்புப்' பெண்மணியின் '72வது' பிறந்த நாள் இன்று...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 24, 2020 10:20 AM

தமிழகத்தின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Today 72nd birthday of former Chief Minister Jayalalitha

தமிழகத்தின் முதலமைச்சர், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர், முன்னணி திரைப்பட நடிகை, மாநிலத்திலேயே முதல் மாணவி என தான் வகித்த ஒவ்வொரு துறையிலும் தனி முத்திரை பதித்தவர் ஜெயலலிதா. லட்சக்கணக்கான தமிழர்களால் அம்மா என அன்புடன் அழைக்கப்படுபவர். அவரது 72வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

‘ஜெயலலிதா’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் அவரின் இயற்பெயர் கோமலவள்ளி. இவர் ஜெயராம் மற்றும் வேதவள்ளி தம்பதியருக்கு மகளாக மைசூரில் பிறந்தார். அவரது குடும்பம் அரச மைசூர் வம்சாவழியை சார்ந்தது. மைசூர் நீதிமன்றத்தில் அரச மருத்துவராக பணியாற்றிய அவருடைய தாத்தா, மைசூர் மன்னர் ஜெயசாமராஜெந்திரா உடையார் அவர்களின் சமூக இணைப்பைப் பிரதிபலிப்பதன் காரணமாக தனது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் முன்பகுதியில் ‘ஜெயா’ என்ற சொல்லை வழக்கமாக சேர்த்தார்.

ஜெயலலிதா இரண்டு வயதிலேயே தன் தந்தையை இழந்தார். பெங்களூரில் சில ஆண்டுகள் ‘பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலை பள்ளியில்’ கல்வி பயின்றார்.

சென்னையிலுள்ள ‘சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில்’ தனது கல்வியைத் தொடர்ந்த இவர், இளம் பருவத்திலேயே அறிவாற்றல், நினைவாற்றலுடன் விளங்கினார். பள்ளியிறுதித் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்றார். பின்னர் ‘ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்’ தனது பட்டப்படிப்பை முடித்தார்.

ஷங்கர்.வி.கிரி அவர்கள் இயக்கிய “எபிஸில்” என்ற ஆங்கில படம் மூலமாக தனது திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.ஜெயலலிதா அவர்களின் முதல் இந்திய படம், 1964 ல் வெளியான “சின்னடா கொம்பே” என்ற கன்னட படம். ஒரு வருடம் கழித்து, அவர் “வெண்ணிற ஆடை” என்ற படம் மூலமாக தமிழ் திரையுலகில் அவரது நடிப்பைத் தொடங்கினார்.  ஆயிரத்தில் ஒருவன், கன்னித்தாய், தனிப்பிறவி, முகராசி, காவல்காரன் என எம்.ஜி.ஆருடன் அவர் இணைந்து 28 படங்களில் பெரும்பாலானவை வெற்றிப் படங்களாக அமைந்தன.

சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ஆர்., ஜெய்சங்கர், முத்துராமன் ஆகியோருடன் தமிழிலும், என்.டி.ஆர்., நாகேஸ்வரராவ், தர்மேந்திரா போன்ற முன்னணி நடிகர்கள் பலருடன் பிற மொழிகளிலும் நடித்துள்ளார் ஜெயலலிதா. 1980ல் வெளியான  “நதியை தேடி வந்த கடல்" அவரது கடைசி படமாகும்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 127 படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம்வந்த அவர், ஏழு மொழிகளில் பேசத் தெரிந்தவர்.

1980ல் எம்.ஜி.ஆர். முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்த ஜெயலலிதா, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், சத்துணவுத்திட்ட உயர்மட்டக் குழுவின் உறுப்பினராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப்பின் தமது விடா முயற்சியால் அதிமுக பொதுச்செயலாளராக ஆனார். 1991, 2001, 2011, 2016 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க.வை வெற்றிபெறச் செய்து முதலமைச்சராகவும் பதவி வகித்தார்.

ஜெயலலிதா ஆட்சியின்போது அமல்படுத்தப்பட்ட தொட்டில் குழந்தை திட்டம், மழைநீர் சேமிப்புத் திட்டம், அம்மா உணவகம், படித்த பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் திட்டம், மகளிர் காவல் நிலையம், இலவச லேப்டாப் திட்டம் போன்றவை இன்றும் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், பிற மாநிலங்களும் பின்பற்றும் முன்னோடித் திட்டங்களாகத் திகழ்கின்றன.

தேசிய அளவில் மதிக்கப்படக்கூடிய முக்கிய தலைவராக ஜெயலலிதா விளங்கினார். அவரது கருத்துக்கள் தேசிய அளவில் விவாதப்பொருளாக மாறின. ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்த்த பலரும் அவர் மீது தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருந்தனர். தனியொரு பெண்மணியாக இந்திய அரசியல் களத்தில் சாதித்துக் காட்டிய ஜெயலலிதாவின் வாழ்க்கை பெண்கள் பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது என்றால் அது மிகையில்லை...

Tags : #JAYALALITHA #72 BIRTHDAY #FORMER C.M. #IRON LADY #ADMK