இன்னும் எத்தனை ‘நாளைக்கு’ மழை இருக்கு..? சென்னை வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது தமிழக கடலோர பகுதிகளில் நிலவுவதால் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் சற்று கனமழை பெய்தது. இதனால் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆலந்தூர், ஆதம்பாக்கம், கிண்டி, மடிப்பாக்கம், பரங்கிமலை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாளை (திங்கள்கிழமை) கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, ராமாநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 3 நாள்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசான மழையும், மேற்குத்தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
