BREAKING: தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ.. முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு .. பிரதமருக்கு பரபரப்பு கடிதம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் முடிவினை மத்திய அரசு கைவிட கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

நியூட்ரினோ திட்டம்
அறிவியலின் ஆதார குணங்களையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டவை இந்த நியூட்ரினோ துகள்கள். இவற்றின் மூலமாக, பேரண்டம் எப்படி உருவானது உள்ளிட்ட மனித குலம் இதுவரையில் கண்டுபிடிக்கத் தடுமாறும் பல விஷயங்களை அறிந்துகொள்ளலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
எதிர்ப்பு
இதன் இடையே தேனியின் பசுமையான மலை பகுதியை வெடி பொருள் கொண்டு தகர்த்து குகைகள் அமைத்தால் அந்த பகுதியின் சுற்றுச்சூழல் மாசடையும் என்றும் அப்பகுதியில் உள்ள விலங்கினங்களுக்கு அவை பாதிப்பாக அமையும் என்றும் பல்வேறு அமைப்புகள் இந்த திட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கின்றன.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றினை எழுதி இருக்கிறார்.
அந்தக் கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின்," தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமைய இருக்கும் நியூட்ரினோ ஆய்வகத்தால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் மீளாத பாதிப்பிற்கு உள்ளாகும். உலகின் மிகச்சிறந்த பல்லுயிரின பெருக்க பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் அப்பகுதியில் உள்ள தாவர மற்றும் அரிய உயிரினங்களுக்கு பாதிப்பு நேரக்கூடும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
புலிகள் சரணாலயம்
"நியூட்ரினோ ஆய்வகம் அமைய இருக்கும் பகுதி தேசிய புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடத்திற்குள் வருவதால் அந்த விலங்குகளை பாதுகாக்கும் திட்டங்கள் பாதிக்கப்படும். ஆகவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும்" என முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், ஆய்வகம் அமைந்தால் அது சம்பல் நதி மற்றும் கொட்டக்குடி ஆறுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அந்த ஆறுகளை நம்பி இருக்கும் ஐந்து மாவட்ட மக்கள் மிகுந்த சிரமப்படுவார்கள் எனவும் கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே 17.06.2021 அன்று நியூட்ரினோ திட்டத்தை கைவிடும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்ததை குறிப்பிட்டுள்ள முதல்வர்," பல்லுயிரிய வளம் மிகுந்த மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைய இருக்கும் இந்த திட்டத்தை உடனடியாக கைவிடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
Russia – Ukraine Crisis : 800 இந்திய மாணவர்களை மீட்ட பெண் விமானி.. யார் இந்த மகாஸ்வேதா சக்கரவர்த்தி?

மற்ற செய்திகள்
