வீட்டை காலி பண்ண சொன்ன ஓனர்.. சிறுவன் அப்துல் கலாமுக்கு.. முதல்வரிடம் இருந்து வந்த சூப்பர் சர்ப்ரைஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்"எல்லோரும் மனித நேயத்தோட நடந்துக்கணும்" எனச் சொல்லி இணையவாசிகள் அனைவரின் கவனத்தையும் ஒரே வீடியோவில் தன்பக்கம் இழுத்தவன் அப்துல் கலாம் என்னும் சிறுவன். இத்தனை சிறிய வயதில் சமூகத்தை நேசிக்கும் பெரிய மனதை கொண்ட அப்துல் கலாமின் வீடும் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் தவித்து வந்திருக்கிறது. இருளில் தவித்துவந்த அந்த குடும்பத்திற்கு விளக்கேற்றி வைத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

மனிதநேய பேட்டி
சென்னையின் கண்ணகி நகரில் வசித்துவரும் அப்துல், சமீபத்தில் இணையதள தொலைக்காட்சிக்கு பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அதில், மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்றும் அதற்கு மனிதநேயம் வளர வேண்டும் எனவும் அப்துல் குறிப்பிட்டு இருந்தார். இந்த சிறிய வயதில் உலகில் அனைவரையும் நேசிக்க வேண்டும் என இந்தச் சிறுவன் கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது.
Behindwoods பேட்டி
சென்னை கண்ணகி நகரில் வசிக்கும் திவ்யா (எ) தில்ஷத் பேகம் கலப்பு திருமணம் செய்துகொண்டதால் தான் அனுபவிக்கும் சிரமங்கள் குறித்து பிஹைண்ட்வுட்ஸ் சேனலிடம் பகிர்ந்துகொண்டார். முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மாணவியான பேகம், வர்தா புயலின்போது தங்களது வீட்டினை பறிகொடுத்தாக கூறுகிறார். முதுகலை படிப்பு படித்திருந்தாலும் மதம் மாறி திருமணம் செய்துகொண்டதால் தங்களை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை என பேகம் கூறுவது மனசாட்சி உள்ள ஒவ்வொருவரையும் உலுக்கும் சொல்லாக அமைந்துள்ளது.
முதல்வர் நடவடிக்கை
இந்நிலையில் மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல் கலாமை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார், அப்போது தாங்கள் வறுமை நிலையில், வாடகை வீட்டில் வசிப்பதாகவும், வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்யும் படி வலியுறுத்துவதாகவும், அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என மாணவர் அப்துல் கலாமின் பெற்றோர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் உடனடியாக அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்க வேண்டும் என, துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு உத்திரவிட்டுள்ளார்.
நாளைக்குள் வீடு
இந்த உத்தரவின் பேரில், இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்த, அமைச்சர் தா.மோ.அன்பரசன், அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்க வேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்பு கொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும் படி கேட்டுக்கொண்டதாகவும், நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்க உத்தவிட்டுள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு 'பெரியார் இன்றும் என்றும்' நூலினை பரிசாக வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதநேயம் பற்றி பேசிய சிறுவனின் உண்மை நிலையறிந்து கவலை கொண்ட இணையவாசிகள் அனைவரும் இப்போது பெருமகிழ்ச்சியில் உள்ளனர்.
நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைந்த மக்கள் நீதி மய்ய வேட்பாளரின் எடுத்த விபரீத முடிவு..!

மற்ற செய்திகள்
