'இது ரிசர்வேஷன்.. எறங்குங்க!'.. ஓடும் ரயிலில் தாயின் கண் முன்னே மகனுக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 18, 2019 10:49 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் தனது 65 வயது தாயார் விஜயாவுடன் சென்னைக்கு செல்வதற்காக, திருசெந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.

son dead after he tries to get down from running train

ஆனால் சரவணனும் அவரது தாயார் விஜயாவும் ஏறிய அந்த  பெட்டி முன்பதிவு செய்யப்பட்டவர்களுக்கான பெட்டி என்பதை தாமதமாகவே உணர்ந்துள்ளனர். அதாவது ரயில் நகரும் அவசரத்தில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருவரும் ஏறியுள்ளனர். இதனையடுத்து, இவர்களை அங்குவந்த டிடிஆர் இந்தியில் கத்தியதாகவும், அதனால் இருவரும் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர். அப்போது சரவணன் தனது தாயாருடன் முன்பதிவில்லாத அல்லது பொதுப் பயணிகளின் பெட்டிக்கு வேகவேகமாக சென்றுள்ளார்.

ஆனால் தனது தாயார் வருவதற்கு முன்னரே, முதலில் தான் ஓடிச்சென்று ரயிலில் ஏறிவிட்டார் சரவணன். அதற்குள் தனது தாயார் விஜயா ரயிலில் ஏறுவதற்குள் ரயில் புறப்படுவதை கண்டு அதிர்ந்தார். தனது தாயார் ரயிலின் அந்த பெட்டியை நெருங்குவதற்குள் ரயில் சிறிது தூரம் செனறேவிட்டது. அதன் பின்னரே ரயில் நின்றது. இதை பார்த்த விஜயா தனது மகன் தனக்காக ரயிலின் செயினை பிடித்து இழுத்து நிறுத்தியிருக்க வேண்டும் என்று உணர்ந்து அருகில் சென்றுள்ளார்.

அங்குதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. விஜயா நினைத்தது போலவே, ரயிலை நிறுத்தியது சரவணன்தான். ஆனால் அவசர கால செயினை பிடித்து இழுத்து அவர் ரயிலை நிறுத்தவில்லை. மாறாக, தாயை விட்டுவிட்டு ஏறிவிட்டோமே என்ற குற்றவுணர்வில், மீண்டும் ரயிலில் இருந்து இறங்க நினைத்த சரவணன் ஓடும் ரயிலில் இருந்து குதித்தபோது ரயில் சக்கரங்களுக்கும் நடைமேடைக்கும் இடையில் இருந்த இடைவெளியில் விழுந்து தண்டவாளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதனால்தான் ரயில் நின்றது. அவ்விடத்தை அடைந்த சரவணனின் தாயார் விஜயா கதறி அழுத சம்பவம் அந்த ரயில் நிலையத்தையே உருக்கியது. ரயிலில் பணிபுரிபவர்களிடம் தமிழ்ப் பயணிகள் தங்களுக்குத் தேவையான விபரங்கள கேட்க முடியாத சூழல் இருந்ததாகவும், அதற்குக் காரணம் ரயில்வேயில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தமிழ் தெரியாததுதான் என்றும் சரவணனின் உறவுக்காரரான சோமு தெரிவித்துள்ளார்.

Tags : #MOTHERANDSON #RAILWAY #TRAIN #CUDDALORE