கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் பல்லக்கில் இருந்து திருடப்பட்ட வெள்ளி தகடுகள்.. ஒருவர் கைது..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கும்பகோணத்தில் சாமி பல்லக்கில் இருந்த வெள்ளி தகடுகளை திருடியதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read | "பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ போலியானது".. DGP சைலேந்திர பாபு விளக்கம்..!
ஆதி கும்பேஸ்வரர் ஆலயம்
கும்பகோணத்தில் அமைந்திருக்கும் ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் பாடல் பெற்ற திருத்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் இங்கு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மக பெருவிழா துவங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து 5 வெள்ளி பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளின் புறப்பாடும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் காலை புறப்பாடு நடைபெற்று பின்னர் பல்லக்குகள் அங்க மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
அதிர்ச்சி சம்பவம்
அப்போது, மர்ம நபர் ஒருவர் அங்க மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பல்லக்கில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளி தகடுகளை திருடுவதை கோவில் பணியாளர் செல்வம் என்பவர் பார்த்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விரைந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்திருக்கிறார். இதற்குள் கோவில் பணியாளர்கள் மற்றும் செயலாளர் ஆகியோர் அங்கு கூடிவிட்டனர்.
புகார்
இதனை தொடர்ந்து இதுகுறித்து ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அப்போது, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த மர்ம நபரை விசாரித்தனர். அதன் பலனாக அவர் கும்பகோணம் பழைய அரண்மனைக்காரத் தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் மணிவண்ணன் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனிடையே அவரிடமிருந்து வெள்ளி தகடுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
5 பல்லக்குகள்
இது ஒருபுறம் இருக்க, ஆதி கும்பேஸ்வரர் ஆலையத்திற்கு சொந்தமான 5 பல்லக்குகளில் இருந்து காணாமல்போன வெள்ளி தகடுகளை கண்டுபிடிக்க வேண்டும் என கோவில் செயலாளர் கோ.கிருஷ்ணகுமார்ன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்த விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் பல்லக்கில் இருந்து வெள்ளி தகடுகளை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் விமானம் போலவே கனவு வீட்டை கட்டிய நபர்.. வைரலாகும் வீடியோ.!

மற்ற செய்திகள்
