‘இந்தியாவிடம் தோற்றதும் தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருந்தது..’ செய்தியாளர் சந்திப்பில் அதிர்ச்சித் தகவல்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Jun 25, 2019 01:28 PM

உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய இந்திய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Wanted To Commit Suicide admits Pakistan coach Mickey Arthur

கடந்த 16ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் 7வது முறையாகத் தொடர்ந்து பாகிஸ்தானை வென்ற பெருமையைத் தக்க வைத்துள்ளது இந்திய அணி. இந்தத் தோல்விக்குப் பின் பாகிஸ்தான் அணியினர் அந்நாட்டு ரசிகர்களாலும் முன்னாள் வீரர்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். இதனால் மனவேதனை அடைந்த பாகிஸ்தான் வீரர்கள் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் தற்போது ஓரளவு நம்பிக்கை அடைந்துள்ளனர்.

இதுவரை 6 போட்டிகளில் விளையாடிய பாகிஸ்தான் அணி 5 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இனிவரும் 3 போட்டிகளிலும் வெல்ல வேண்டிய கட்டாயத்திலுள்ள பாகிஸ்தான் அணி அடுத்ததாக வலிமை வாய்ந்த நியூசிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர்  நேற்று ஊடகங்களுக்கு அளித்த பேட்டி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் தோற்றபோது என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூடத் தோன்றியது. பின்னரே இது ஒரு போட்டிதானே இன்னும் அதிகமான போட்டிகள் இருக்கிறது எனத் தோன்றியது. ஊடகத்தினரின் பேச்சு மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பால் வெற்றி பெற்றே ஆக வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினோம்.

அடுத்த மூன்று முக்கியமான போட்டிகளில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டி மிகவும் சவாலானது. நாங்கள் எங்கள் முழுத்திறனையும் வெளிப்படுத்தினாலே வெற்றி பெற முடியும். நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் மூன்றிலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என அனைத்து அணிகளையும் வீழ்த்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #INDVSPAK