‘அது உண்மை இல்லை’!.. ஹர்திக் பாண்ட்யா வெளியிட்ட ‘பரபரப்பு’ அறிக்கை.. மும்பை ஏர்போர்ட்டில் என்ன நடந்தது..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை விமான நிலையத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விலையுயர்ந்த கைக்கடிகாரத்தை பறிமுதல் செய்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு அமீகத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் இந்திய வீரர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya), நேற்று துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்துள்ளார். அப்போது அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, 5 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு கைக்கடிகாரங்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு போதிய ஆவணங்கள் ஹர்திக் பாண்ட்யாவிடம் இல்லாததால், கைக்கடிகாரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஹர்திக் பாண்ட்யா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ‘திங்கள்கிழமை துபாயில் இருந்து மும்பை விமான நிலையம் வந்தேன். என்னுடைய பொருட்களை எடுத்தபின், நானே நேராக மும்பை சுங்கத்துறை அதிகாரிகளிடம் சென்று காண்பித்தேன். தற்போது என்னைப்பற்றி தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதற்காக இந்த விளக்கத்தை அளித்துள்ளேன்.
நான் சமர்பித்த பொருட்கள் எல்லாம் துபாயில் சட்டப்படி வாங்கியதுதான். இதற்கான ஆவணங்களை சுங்கத்துறை அதிகாரிகள் கேட்டனர், நான் அதை சமர்பித்துள்ளேன். சமூக வலைதளங்களில் என்னிடம் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 2 கைக்கடிகாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தவறான தகவல் பரவி வருகிறது. அது ஒரு கைக்கடிகாரம் தான், அதன் மதிப்பு தோராயமாக 1.5 கோடி ரூபாய்.
— hardik pandya (@hardikpandya7) November 16, 2021
நான் சட்டத்தையும், அரசு துறைகளையும் மதித்து நடக்கும் குடிமகன். மும்பை சுங்கத்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுக்க தயாராக உள்ளேன். என்னைப் பற்றி தவறாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றது’ என ஹர்திக் பாண்ட்யா குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
