மூதாட்டியின் இறுதிச் சடங்கில்.. சிரிச்சுகிட்டே போஸ் கொடுத்த 'குடும்பம்'.. உருவான 'சர்ச்சை'.. தற்போது தெரிய வந்த பின்னணி
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீபத்தில், இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று, அதிகம் வைரலாகி சர்ச்சையை உண்டு பண்ணிய நிலையில், தற்போது அதற்கான காரணம் என்ன என்பதும் தெரிய வந்துள்ளது.

கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்த 95 வயதான மரியம்மா, கடந்த வாரம் உயிரிழந்தார்.
இவரது இறுதிச் சடங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில், மரியம்மாவின் உடல் ஐஸ் பெட்டியில் இருக்க, அவரை சுற்றி நிற்கும் குடும்பத்தினர் சுமார் 40 பேரும் சிரித்துக் கொண்டே நிற்கின்றனர்.
இது தொடர்பான புகைப்படம் தான், சமீபத்தில் இணையத்தில் வெளியாகி கடும் விவாதத்தை வேறு உண்டு பண்ணி இருந்தது. ஒருவர் மறைந்து போன சமயத்தில், இப்படியா சிரித்துக் கொண்டிருப்பது என அந்த குடும்பத்தை சுற்றி ஏராளமான விமர்சனங்களும், கண்டனங்களும் கடுமையாக எழுந்தது. அப்படி இருக்கையில், ஏன் அந்த புகைப்படத்தில் அனைவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள் என்பது பற்றிய உண்மை தெரிய வந்துள்ளது.
95 வயதாகும் மரியம்மா, கடந்த ஒரு வருடமாக, வயது மற்றும் உடல்நிலை காரணமாக, படுத்த படுக்கையாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, கடந்த சில வாரமாக அவரது உடல்நிலை இன்னும் மோசமாகவே, சமீபத்தில் அவர் உயிரிழந்துள்ளார். மரியம்மாவுக்கு மொத்தம் 9 குழந்தைகள் மற்றும் 19 பேரக் குழந்தைகளும் உள்ளனர்.
அவர்கள் அனைவரும் உலகின் பல இடங்களில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில், பெரும்பாலானோர் மரியம்மாவின் இறுதிச் சடங்கிற்கு வந்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் ஒருவர் பேசுகையில், "95 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த மரியம்மா, குழந்தைகள் மற்றும் பேரக் குழந்தைகள் என அனைவரையும் நேசித்து வந்தார். இத்தனை ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த மரியம்மாவையும், குடும்பங்கள் அவருடன் கழித்த மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூரும் வகையிலும் தான் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த படத்தை ஏற்றுக் கொள்ள முடியாதவர்கள், இறந்த பிறகு கண்ணீரை மட்டுமே பார்த்தவர்கள். புலம்புவதற்கு பதிலாக, இறந்தவர்களை மகிழ்ச்சியுடன் விடைபெற செய்ய வேண்டும். நாங்களும் அதையே தான் செய்தோம். பேமிலி வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்பட்ட இந்த புகைப்படம், எப்படியோ இணையத்தில் வெளியாகி விட்டது. இது பற்றி, ஏராளமானோர் விமர்சனம் செய்கின்றனர். எங்களுக்கு யார் மீது எந்த புகாரும் இல்லை" என குடும்ப உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மூதாட்டியின் இறுதிச் சடங்கில், குடும்பமாக அனைவரும் சிரித்துக் கொண்டே இருந்த புகைப்படம் சர்ச்சையை உண்டு பண்ணியதையடுத்து அந்த குடும்பத்தினரில் ஒருவர் இதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read | காதலி சொன்ன ஒரே வார்த்தை.. ஒரு வருசத்துல 70 கிலோ குறைத்த வாலிபர்.. சில்லறையை சிதற விட்ட நெட்டிசன்கள்!!

மற்ற செய்திகள்
