உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் செய்த சம்பவம் பெரிய அளவில் பதற்றத்தை உண்டு பண்ணி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அசம்கர் என்னும் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. உள்ளே என்னவென்று எட்டிப் பார்த்த அப்பகுதி மக்களுக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. உடல் ஒன்று உள்ளே கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ந்து போன நிலையில், போலீசாருக்கும் இது தொடர்பாக அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து சம்பவ இடம் வந்த போலீசார், கிணற்றில் கிடந்த உடலை மீட்டுள்ளனர்.
பெண்ணின் உடல் என்பது தெரிய வந்த நிலையில், உடலில் சில பாகங்கள் இல்லாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த பெண் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இஷாக்பூர் என்னும் கிராமத்தை சேர்ந்த ஆராதனா என்ற இளம்பெண் என்பதும் உறுதியானது. இதற்கான காரணம் யார் என்பது குறித்து நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் வெளியானது.
பிரின்ஸ் யாதவ் என்ற வாலிபர், இஷாக்பூர் கிராமத்தில் வசித்து வந்த ஆராதனாவை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கு மத்தியில், வேறொரு இளைஞரை ஆராதனா திருமணம் செய்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனால், கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார் பிரின்ஸ் யாதவ். அப்படி ஒரு சூழலில் தனது காதலியையும் கொலை செய்ய தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பிரின்ஸ் திட்டம் போட்டுள்ளார்.
முன்னதாக, இந்த விஷயம் குறித்து சமாதானம் பேச ஒரு கோவிலில் அழைத்து செல்வதாக கூறி ஆராதனாவை பைக்கில் ஏற்றி பிரின்ஸ் அழைத்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்படி ஒரு சூழலில், கரும்பு தோட்டம் ஒன்றில் வைத்து உறவினர்கள் சிலர் உதவியுடன் ஆராதனாவை பிரின்ஸ் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும், அவரது உடலையும் 6 பாகங்களாக வெட்டி கிணறு உள்ளிட்ட இடங்களில் வீசியதாகவும் தகவல்கள் கூறுகின்றது.
இது தொடர்பாக பிரின்ஸ் யாதவை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்தி ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். முன்னதாக, ஆராதனாவின் உடல் பாகங்களை எடுப்பதற்காக போலீசார் பிரின்ஸை அழைத்து சென்ற போது மறைத்து வைத்த துப்பாக்கியை கொண்டு போலீசாரை பிரின்ஸ் சுட முயன்றதாகவும், இதனால் தற்காத்து கொள்ள பிரின்ஸை போலீசார் சுட்டதில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக, பிரின்ஸ் குடும்பத்தினர் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
