கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்..பழங்குடி பெண்ணை குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவித்த பாஜக.. யார் இந்த திரௌபதி முர்மு?
முகப்பு > செய்திகள் > இந்தியாநடைபெற இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக திரௌபதி முர்மு என்னும் பழங்குடி பெண்ணை அறிவித்திருக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி.

Also Read | மாயமான பெண் மதபோதகர்.. ஆடுமேய்க்கச் சென்றவர் பார்த்த பயங்கர சம்பவம்.. பரபரப்பான சென்னை..!
குடியரசு தலைவர் தேர்தல்
இந்தியாவின் தற்போதைய குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து, வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
இதனையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி தமது வேட்பாளர் தேர்வு குறித்து மூத்த தலைவர்கள் டெல்லியில் கலந்தாலோசித்தனர். இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத்சிங் என பல மூத்தத் தலைவர்கள் பங்கேற்றனர். உயர்மட்ட கலந்தாலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தங்கள் வேட்பாளாராக அறிவித்தார்.
திரௌபதி முர்மு
ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு பிறந்த திரௌபதி முர்மு பழங்குடி இனத்தை சேர்ந்தவராவார். ஒருவேளை இந்த தேர்தலில் திரௌபதி முர்மு தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும். தற்போது 64 வயதான முர்மு ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பயின்று இளங்கலை பட்டம் பெற்றார்.
அதைத் தொடர்ந்து ஆசிரியராகவும் பணியாற்றிவந்த முர்மு, பின்னர் அரசியல் கால்பதித்தார். தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், படிப்படியாக சட்ட மன்ற உறுப்பினராக மக்களால் தேர்வு செய்யப்பட்டார்.
அமைச்சர்
இருமுறை சட்டமன்ற உறுப்பிரான முர்முய ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார். பின்னர், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநராகவும் இவர் பணியாற்றினார்.
இந்நிலையில், பாஜக தலைமையிலான குடியரசு தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டிருப்பது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
