64 வருஷத்துல இப்படி ஒரு மழையை யாரும் பார்த்ததில்லை.. அதுவும் 12 மணி நேரத்துல.. திணறிப்போன மக்கள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇமாச்சல பிரதேசத்தில் கடந்த 64 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

கொட்டித்தீர்த்த மழை
இமாச்சல பிரதேச மாநிலத்தின் தர்மசாலா நகரத்தில் மிககனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநில பேரிடர் மீட்பு படைகள் அங்கே வரவழைக்கப்பட்டுள்ளன. தர்மசாலாவில் கடந்த 12 மணிநேரத்தில் 333 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் அந்த நகர் முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதுகுறித்து மாநில பேரிடர் மீட்பு குழு வெளியிட்ட அறிக்கையில்,"வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணி முதல் சனிக்கிழமை காலை 9:00 மணி வரையிலான 12 மணி நேரத்தில், தர்மசாலாவில் 333 மி.மீ மழை பதிவாகியுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது. கடந்த 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தர்மசாலாவில் 316 மிமீ மழை பதிவானது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் சமீபத்தில் பெய்த கனமழையின் விளைவாக பல நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. மண்டியில் மணாலி-சண்டிகர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் ஷோகியில் சிம்லா-சண்டிகர் நெடுஞ்சாலை உட்பட சுமார் 743 சாலைகள் போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் சுதேஷ் குமார் மோக்தா சனிக்கிழமை அன்று தெரிவித்திருந்தார்.
சனிக்கிழமையன்று, இமாச்சலப் பிரதேச ஐஎம்டி இயக்குநர் புய் லால், ஆகஸ்ட் 24 வரை மாநிலத்திற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில்,"ஏற்கனவே மாநிலத்தில் இருக்கும் சுற்றுலாப் பயணிகள் ஆறுகள் மற்றும் மலைப்பகுதிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் அவர்கள் சுற்றுலா தகவல் மையங்களை தொடர்பு கொள்ளலாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இழப்பீடு
இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மாண்டியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்திருக்கிறார். மேலும், இதுகுறித்து பேசிய அவர்,"பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஏற்கனவே ரூ.80,000 உடனடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மழையினால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு வீடுகள் வழங்கும். வானிலையை பொறுத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்" என்றார். தர்மசாலாவில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கே இயல்புநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.

மற்ற செய்திகள்
