"இந்தாங்க கோவில் பிரசாதம்".. மர்ம நபர் கொடுத்த பானம்.. பக்தியோடு பருகிய மக்களுக்கு நேர்ந்த சோகம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாஹரியானா மாநிலத்தில் கோவில் பிரசாதம் என ஒருவர் அளித்த பானத்தை பருகிய 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குர்கோன்
ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் உள்ள முபாரிக்பூர் கிராமத்தில் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த கண்காட்சியை தினந்தோறும் ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல கண்காட்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் கோவில் பிரசாதம் என கூறி குளிர்பானம் ஒன்றை அங்கு இருந்த மக்களிடம் கொடுத்திருக்கிறார்.
விபரீதம்
இதனை அடுத்து அந்த மர்ம நபர் கொடுத்த பானத்தை வாங்கி பருகிய பொதுமக்கள் அடுத்த அரைமணி நேரத்தில் மயக்கமடைந்தனர். இதனை கண்ட அங்கிருந்த மக்கள் மயக்கமடைந்தோரை உடனடியாக அருகில் இருக்கும் சிவில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. பாதிக்கப்பட்டோரை மருத்துவர்கள் பரிசோதித்ததில் அவர்கள் குடித்த பானத்தில் மயக்க மருந்து கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குர்கோன் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மர்ம நபர் கொடுத்த பானத்தை அருந்தி மயக்கமான நபர்களிடம் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தங்களுடைய நகை, உள்ளிட்ட உடமைகள் அப்படியே இருப்பதாகவும் எதுவும் திருடு போகவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் காவல்துறையிடம் தெரிவித்திருக்கின்றனர்.
இது குறித்து பேசிய ஃபரூக் நகர் காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) சுனில் குமார்," கண்காட்சி நடைபெற்ற இடத்திற்கு அருகே கோவில் இருக்கிறது. ஆகவே பக்தர்கள் பலரும் இந்த கண்காட்சிக்கு வந்திருக்கின்றனர். அப்போது மர்ம நபர் பானம் ஒன்றை பொதுமக்களுக்கு கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மயக்கமான 28 பேர் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை சீராக உள்ளது. நாங்கள் இதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளோம். கண்காட்சிக்கு வந்தவர்களின் உடமைகள் அப்படியே உள்ளன, எதுவும் திருடப்படவில்லை. சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
கோவில் பிரசாதம் எனக்கூறி மயக்க மருந்தை கொடுத்த மர்ம நபரை காவல்துறை வலைவீசி தேடிவருகிறது.

மற்ற செய்திகள்
