ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியான படம் 'காஞ்சனா 3'. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் ஓவியா, வேதிகா, கோவை சரளா, சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு தமன் பின்னணி இசையமைத்திருந்தார்.
இதன் முதல் பாகமான 'காஞ்சனா' திரைப்படத்தை ஹிந்தியில் 'லக்ஷ்மி பாம்' என்கிற பெயரில் ராகவா லாரன்ஸ் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் தனக்கு ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் பணியில் இருந்து விலகுவதாக ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் ராகவா லாரன்ஸ் தரப்பில் இருந்து தற்போது வெளியான அறிக்கையில், மும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது.
தன்னைத் தேடி வந்து பேசியதாலும், அக்ஷய் குமார் ரசிகர்கள், தனது ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.