தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல்கட்சிகளின் பிரச்சாரம் 16 ஆம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது. இதில் பண விநியோகம் காரணமாக வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ஆணையத்தால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

திரையுலக பிரபலங்கள் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டும் வீடியோ மூலம் வலியுறுத்தியும் வருகின்றனர். இயக்குநர்கள் வெங்கட் பிரபு, சேரன் உள்ளிட்டோர் தங்கள் வாக்கு சேகரிப்பதன் அவசியத்தை தெரிவித்தனர்.
இந்நிலையில் இயக்குநர் இமையம் பாரதிராஜா சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என் தமிழ் மண். இயற்கை வளம், கனிம வளம், கலாச்சார பண்பாட்டுப் பயிர் வளர்த்தவள். தமிழ் வளம், அறிவு வளம், தொன்மை வளம் ஆகியவற்றின் மீது சமீபகாலமாக போர் தொடுத்துக்கொண்டிருக்கிறது மேலாதிக்கச் சக்தி.
இந்த பூமியில் யார் வேண்டுமானாலும் வரலாம், தொழில் செய்யலாம், அரசியல் செய்யலாம், ஆனால் தலைவனாக இருப்பதற்கு முழுத்தகுதி தமிழன் ஒருவனுக்கு மட்டும் தான் உண்டு. மண்ணின் மைந்தன் தான் இந்த பூமியை ஆள வேண்டும் என்பது அஸ்ஸாமிற்கு உள்ளது போல, கேரளாவிற்கு உள்ளது போல, கர்நாடகத்திற்கு உள்ளது போல, தமிழர்களுக்கு உரிமையில்லையா ?
இதில் ஒரே ஒரு விலக்கு. எம்ஜிஆர். தன்னை முழுமையாக தமிழனாக மாற்றிக்கொண்டார். அது போல் ஏன் உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளக்கூடாது.
தலைமை பொறுப்பை ஒரு தமிழனுக்கு விட்டுக் கொடு என்பதில் என்ன தவறு?. எல்லா தலைவர்களும் பேசுகிறீர்கள். ஆனால் நீங்கள் அரசியல் பேசுகிறீர்கள். ஒருவன் மட்டும்தான் இந்த மண்ணுக்கும் , மொழிக்கும், பூமிக்கும், தன்மானத்திற்கும் போராடிக்கொண்டிருக்கிறான். பேர் சொல்லமாட்டேன் புரிஞ்சுக்க.
நான் தமிழன் என்று சொல்வதில் உனக்கு கோபம் வருகிறது. என் தாயை, தாய் என்று சொல்வதில் நான் ஏன் பயப்பட வேண்டும்? ஏன் நான் தமிழ் தேசியம் பேசக் கூடாதா ? கேட்கிறான் ஒருவன். விடிவெள்ளியாக வந்திருக்கிறான் அவன். தெளிவும் அறிவும் புத்திசாலித்தனமும் தனமானமும் விவேகமும் இருந்தால் புரிந்துகொள் அவன் யார் என்பதை.
ஒரே ஒருத்தன் உப்பு போட்டு திங்கறான். தனித்து நிற்கிறான். நல்ல தெரிஞ்சோ தெரியாமலோ விவசாய சின்னம் கொடுத்திருக்காங்க. பேர் சொல்லமாட்டேன். அவனை அடையாளம் கண்டுகொள். இந்த விரலில் அவனுக்கு அடையாளம் காட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.