அமெரிக்காவை உலுக்கிய ‘ஜார்ஜ் பிளாய்ட்’ மரணம்.. அந்த போலீஸ் அதிகாரிக்கு என்ன ‘தண்டனை’ தெரியுமா..? நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஒருவரை போலீஸ் அதிகாரி கொலை செய்த வழக்கில் அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் (Minneapolis) நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் (George Floyd). இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி மினியாபோலீஸ் நகரில் உள்ள ஒரு கடைக்குச் சென்று பொருட்களை வாங்கியுள்ளார். அப்போது அவர் கொடுத்த பணத்தில் 20 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,500) கள்ள நோட்டு இருந்ததாக கடையின் ஊழியர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவலின்பேரில் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் (Derek Chauvin) தலைமையில் 4 போலீசார் சம்பந்தப்பட்ட கடைக்கு விரைந்தனர். அப்போது விசாரணைக்காக அழைத்தபோது ஜார்ஜ் பிளாய்ட் போலீஸ் வாகனத்தில் செல்ல மறுத்ததாக தெரிகிறது. இதனால் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின், ஜார்ஜ் பிளாய்ட்டை தரையில் தள்ளி அவர் கழுத்தை கால் முட்டியால் அழுத்தினார்.
அப்போது ‘என்னால் மூச்சுவிட முடியவில்லை எழுந்திருங்கள்’ என ஜார்ஜ் பிளாய்ட் கெஞ்சினார். ஆனாலும் போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் எழுந்திருக்கவில்லை. இதனால் மூச்சுவிட முடியாமல் ஜார்ஜ் பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது வைரலானது.
இதனை அடுத்து ஜார்ஜ் பிளாய்டின் இறப்புக்கு நீதி கேட்டு அமெரிக்கா முழுவதும் போராட்டம் வெடித்தது. இனவெறிக்கு எதிராகவும், போலீசாரின் நடவடிக்கையை கண்டித்தும் நடந்த இந்தப் போராட்டம் அமெரிக்காவையே உலுக்கியது. இதனிடையே ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உட்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலீஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதில் டெரிக் சாவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெரிக் சாவினுக்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

மற்ற செய்திகள்
