சாதிக்கணுமா? பயப்படாம உங்களுக்கு நீங்களே சவால் விட்டு பாருங்க..! இறந்த கரப்பான் பூச்சிகளை வைத்து அசத்திய பெண் கலைஞர்
முகப்பு > செய்திகள் > உலகம்பிலிப்பைன்ஸ்: பிலிப்பைன்ஸ் தேசத்தின் மணிலாவில் உள்ள காலூகன் நகரில் வசிக்கும் ப்ரெண்டா டெல்கடோ என்ற பிரபல ஓவியர், இறந்துப்போன கரப்பான் பூச்சிகளின் மீது அழகான ஓவியங்களை தீட்டி கலை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

உங்களுக்கு நீங்களே சவால் விடுங்கள்:
இறந்துப்போன பூச்சி, விலங்குகளை கண்டாலே பல பேருக்கு பயத்தில் வியர்க்க தொடங்கிவிடும், ஆனால், "உங்கள் திறமைகளை கண்டுபிடிக்க பயம் கொள்ளாதீர்கள், முடியாது என நீங்கள் நினைக்கும் விஷயங்களைச் செய்வேன் என உங்களுக்கு நீங்களே சவால் விட்டு சாதித்துக் காட்டுங்கள்" என்று டெல்கடோ தெரிவித்துள்ளார்.
தீவிர கலைகள் மீது ஆர்வம் இழக்கும் இந்தியர்கள்:
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் வெகுஜன சினிமா உள்ளிட்ட கலைகளை பெரும்பான்மையான மக்கள் அறிவார்கள். பிற கலைகளை அறிந்தாலும் மக்கள் அதனை பொருட்படுத்துவதில்லை, அல்லது அது தேவையில்லை என நினைக்கின்றனர். குறிப்பாக இலக்கியம், ஓவியம் உள்ளிட்ட தீவிரக் கலைகளை ரசிப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இந்த ரசனையை வளர்ப்பது இன்றைய தலைமுறையின் முக்கிய தேவையாக உள்ளது. மேலை நாடுகளின் அதற்கான பயிற்சிகள் கல்வி நிலையங்களில் வழங்கப்படுகிறது. ஒரு மனிதன் எந்த துறையில் சாதிக்க விரும்பினாலும் அவனுக்கு அதீதமான நுட்பத் தன்மை பிடிபட வேண்டும். அந்த நுட்பத்தை பெற்றுக் கொள்ள தீவிரக் கலைகளை ரசிக்க பயிற்சி பெறுவது மிகவும் முக்கியம்.
இறந்த கரப்பான் பூச்சிகளை கண்டபோது வந்த யோசனை:
இந்த நிலையில், மணிலாவில் உள்ள காலூகன் நகரில் வசிக்கும் 30 வயது ஆகும் இவர், தான் வேலை செய்யும் இடத்தில் இறந்துப் போன கரப்பான் பூச்சிகளை கண்டபோது, இந்த விசித்திர யோசனை தோன்றியுள்ளது. அதை வெறும் யோசனையோடு நின்று விடாமல் அதனை முயற்சி செய்துள்ளார். கரப்பான் பூச்சியின் சிறகுகள் எவ்வளவு பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்கின்றன என்பதை கவனித்த அந்த பெண் ஓவியர், இறந்த கரப்பான் பூச்சிகளை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசித்து ஓவியம் வரைய தொடங்கியுள்ளார்.
முதன்முதலாக கரப்பான் பூச்சியில் ஓவியம் வரைந்த நபர்:
பூச்சிகளில் ஓவியம் வரைந்த முதல் நபர் மெக்ஸிகோ நாட்டை சேர்ந்த கலைஞர் கிறிஸ்டியன் ராமோஸ் ஆவார். இவர் கரப்பான் பூச்சிகள் மீது எதிர்ப்பு ஓவியங்களை முதன்முதலாக வரைந்துள்ளார். இறந்த பூச்சிகளின் மீது உலகப் புகழ்பெற்ற வின்சென்ட் வான் கோவின் ஸ்டாரி நைட் உள்ளிட்ட அழகான காட்சிகளை வரைவதற்கு டெல்கடோ ஆயில் பெயிண்ட் பயன்படுத்தியுள்ளார். அவரது ஓவியங்கள் இணையத்தில் அதிக பார்வையாளர்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
