பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த வரலாறுகாணாத மழை.. வெளியான சாட்டிலைட் புகைப்படங்கள்.. உறைந்துபோன உலக நாடுகள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்பாகிஸ்தானில் பெய்துவரும் கனமழை காரணமாக மொத்த நாடும் ஸ்தம்பித்துப்போயிருக்கிறது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள சாட்டிலைட் புகைப்படங்களை பார்த்து உலக நாடுகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றன.

கனமழை
பாகிஸ்தானில் இதுவரை இல்லாத அளவுக்கு பருவழமை பெய்துவருகிறது. ஜூன் மாதத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து 1,136 பேர் வெள்ளத்தினால் உயிரிழந்திருக்கிறார்கள். கனமழை காரணமாக மூன்றில் ஒருபங்கு நிலம் தண்ணீரில் மூழ்கியிருக்கிறது. நாட்டின் முக்கியமான பகுதிகள் அனைத்திலும் நீர் நிறைந்து காணப்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர், ஐக்கிய நாடுகள் அவை தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்.
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மற்றும் மேற்கு பலுசிஸ்தான் மாகாணங்களில் உள்ள விவசாய நிலங்களின் பெரும்பாலான பகுதிகளில் நீர் சூழ்ந்து நிற்கிறது. வெள்ளைப்பருக்கு காரணமாக முக்கிய சாலைகள் ஸ்தம்பித்திருக்கின்றன. அனைத்து இடங்களிலும் தண்ணீர் நிற்பதால் அதனை எங்கே திருப்பி விடுவது என்ற குழப்பத்தில் அதிகாரிகள் உள்ளனர்.
சாட்டிலைட் புகைப்படங்கள்
இந்நிலையில், பாகிஸ்தானின் சில பகுதிகளில் நீர் நிறைந்திருக்கும் நிலையை விளக்கும் சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. விவசாய நிலங்கள் அனைத்திலும் நீர் தேங்கி நிற்பது அந்த புகைப்படங்களில் தெளிவாக தெரிகிறது. பாகிஸ்தானின் ரோஜான் எனும் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி எடுக்கப்பட்ட சாட்டிலைட் புகைப்படத்தில் நிலப்பகுதிகள் மற்றும் ஆறு ஆகியவை காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அந்த பகுதி முழுவதுமே தண்ணீரில் மிதப்பது தெரியவந்திருக்கிறது.
33 மில்லியன்
அதேபோல, வெள்ளத்தினால் சேதமடைந்த கிராமங்களின் புகைப்படங்களும் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதில் வீடுகள் இருந்த இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்து நிற்பது தெளிவாகியுள்ளது. இந்த வரலாறு காணாத வெள்ளம் காரணமாக 33 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அரசு தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அவை உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், சீனா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தானுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க முன்வந்திருக்கின்றன. பாகிஸ்தானில் கொட்டிவரும் கனமழையினால் தேசமே நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் தற்போது வெளியான சாட்டிலைட் புகைப்படங்கள் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

மற்ற செய்திகள்
