27 வருஷம்.. ஒருநாள் கூட லீவ் எடுக்காம வேலை பார்க்கும் நபர்.. உதவின்னு கேட்ட உடனே குவிந்த பணம்..நெகிழ வைத்த மக்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்காவில் கடந்த 27 வருடங்களாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் பணிபுரிந்துவரும் ஊழியருக்கு நன்கொடையாக மக்கள் 1 கோடி ரூபாய் வழங்கியிருப்பது பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.

பணிபுரியும் நிறுவனங்களில் இருந்து விடுப்பு எடுக்க வித்தியாசமாக காரணம் கூறும் நபர்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், அமெரிக்காவை சேர்ந்த கெவின் ஃபோர்ட் என்பவர் 27 ஆண்டுகளாக அதே உணவகத்தில் பணிபுரிந்து வருகிறார். அதுவும் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் அனைத்து நாட்களிலும் வேலைக்கு சென்றிருக்கிறார் இவர்.
லாஸ் வேகாஸ் மெக்கரன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பர்கர் கிங்கில் சமையல்காரராகவும் காசாளராகவும் கெவின் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், goody bag எனப்படும் பரிசு பையினை உணவகத்தில் வைத்திருக்கும் கெவின், விரும்புபவர்கள் தனக்கு பரிசளிக்கலாம் என கூறியிருக்கிறார். இதனையடுத்து சாக்லேட்கள், சினிமா டிக்கெட்கள் என பலரும் பல்வறு விதமான பொருட்களை பரிசாக கெவினுக்கு வழங்கியுள்ளனர்.
நன்கொடை
இதனிடையே அவரது மகள் செரினா சமூக வலை தளங்களில் தனது தந்தைக்காக நிதி திரட்ட முடிவெடுத்துள்ளார். இதற்கென ஒரு பக்கத்தை துவங்கிய அவர் அதில் தனது தந்தை 27 வருடங்களாக ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வருவதாகவும், ஓய்வு பெறும் நாளில் அவரிடம் பணம் இருக்க வேண்டும் என்பதால் பொதுமக்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறும் குறிப்பிட்டிருக்கிறார்.
பிரபல குணச்சித்திர நடிகரான டேவிட் ஸ்பேட் இந்த பக்கத்தில் கெவினை பாராட்டி 5000 அமெரிக்க டாலர்களை நன்கொடையாக அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து பல்வேறு மக்கள் கெவினுக்கு பணம் அனுப்ப துவங்கியுள்ளனர். இதுவரையில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக பணம் சேர்ந்துள்ளதாக கெவின் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர்,"மக்களின் இந்த அபரிமிதமான அன்பால் நான் திகைத்துப்போயிருக்கிறேன். அவர்களுடைய ஈகை குணத்திற்கு தலைவணங்குகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
தனது பணியினை ஈடுபாட்டுடன் செய்துவரும் ஊழியரை பாராட்டும் நோக்கில் ஒரு கோடி ரூபாய் வரையில் மக்கள் நன்கொடையாக அளித்திருப்பது உலகம் முழுவதும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.

மற்ற செய்திகள்
