பின்லேடனுக்கு அப்பறம் அமெரிக்கா போட்ட மிகப்பெரிய ஸ்கெட்ச்.. அல்கொய்தா தலைவர் அல் ஜவாஹிரி உயிரிழந்ததாக ஜோ பைடன் அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் அல்கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருக்கிறார்.

அல் ஜவாஹிரி
உலகையே ஸ்தம்பிக்க செய்த செப்டம்பர் 11 தாக்குதலுக்கு ஒசாமா பின் லேடனுக்கு உதவியாக இருந்தவர் அல் ஜவாஹிரி என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் புகழ்பெற்ற இரட்டை கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுவே, பின்னாளில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் அமெரிக்கா படைகளை குவிக்க முக்கிய காரணமாகவும் அமைந்தது. இந்த நாட்களில் அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனுக்கு பக்கபலமாக அல் ஜவாஹிரி இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதிரடி தாக்குதல் மூலம் கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க படையினரால்
பின்லேடன் கொல்லப்பட்டார். அப்போது, அல்கொய்தாவின் தலைவரானார் அல் ஜவாஹிரி. இதுமுதல் அவரை கண்டறிய பல ரகசிய திட்டங்களை அமெரிக்க அரசு செயல்படுத்திவந்தது.
அறிவிப்பு
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆளில்லா விமான தாக்குதலில் அல்கொய்தாவின் தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று அறிவித்திருக்கிறார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பைடன் தெரிவித்திருக்கிறார். இது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள தனது படைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்க அரசு அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து தலிபான் அரசு அங்கே அமைந்தது. இந்நிலையில், மீண்டும் ஆப்கனிஸ்தானில் அமெரிக்க புலனாய்வு அமைப்பான சிஐஏ பகிரங்க தாக்குதலை நடத்தியிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கண்டனம்
பல வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக சொல்லப்படும் அல் ஜவாஹிரி இதற்கு முன்னரும் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் பல முறை வெளிவந்திருக்கின்றன. ஆனால், இந்த முறை தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் ஆப்கானிஸ்தானுக்குள் ஆளில்லா விமானம் பறந்ததற்குக் கண்டனம் தெரிவித்து, `இது சர்வதேச கொள்கைகளை மீறுவதாக அமைந்திருக்கிறது’ எனத் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | சந்தோஷத்துக்கு பதிலா.. வாழ்க்கையையே சோகமா மாத்திய லாட்டரி பரிசு.. தம்பதிக்கு நேர்ந்த பரபரப்பு சம்பவம்..

மற்ற செய்திகள்
