குட் பை...! 'உங்க எல்லாரையும் விட்டு போறேன்...' 'தங்கச்சிய நல்லா பாத்துக்கோங்க...' - ஆயுத படைக் காவலரின் அதிர்ச்சி முடிவு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரத்தில் 25 வயதான ஆயுதப்படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (25). இவர் கடந்த 2017-ம் ஆண்டு இரண்டாம் நிலைக் காவலராகத் தேர்வு செய்யப்பட்டார். சென்னை ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் விபத்து ஒன்றில் காயமடைந்த ஏழுமலை கடந்த அக்டோபர் மாதம் விழுப்புரம் காக்குப்பத்தில் இருக்கும் காவலர் குடியிருப்பில் ஆயுதப்படை காவலராகப் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் இன்று பணிக்கு திரும்பாத ஏழுமலையை பார்க்க சென்ற சக காவலர் ரத்த வெள்ளத்தில் இருந்த ஏழுமலையை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்ததின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், ஏழுமலை குடியிருப்பில் ஆய்வு மேற்கொண்டு, கைரேகை நிபுணர்கள் மூலம் தடயங்களைச் சேகரித்துள்ளார்.
அதையடுத்து காவலர் ஏழுமலையின் உடல் உடற்கூறய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
காவலர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். அதில் அவர் குறிப்பிட்டதாவது, 'ஏழுமலையின் விருப்பத்தின் பெயரில் தான் அவருக்கு கேம்ப் ஆபீஸில் பணி வழங்கப்பட்டது. மேலும் ஏழுமலை தான் செய்யும் பணியை அதிகமாக நேசித்தவர் மற்றும் அமைதியான நபர்.
நேற்று பணி முடிந்து ரிப்போர்ட் செய்யாததால் இன்று காலை 8 மணிக்கு ஆர்டலி காவலர் ஏழுமலையிடம் போனில் பேசியுள்ளார். அப்போது 'இரவு மாத்திரை போட்டுக்கொண்டு தூங்கிவிட்டதால், எழுந்திருக்க முடியவில்லை. இப்போது வந்துவிடுகிறேன்' என்று கூறியிருக்கிறார். மேலும் 10 மணி ஆகியும் வராததால் அவர் குடியிருப்புக்கு சென்று பார்த்த போது அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அதுமட்டுமில்லாமல் ஏழுமலை தன் வீட்டின் சுவரில், என் தற்கொலைக்கு நான் தான் காரணம். அப்பா, அம்மா உங்களையெல்லாம் விட்டுச் செல்கிறேன். உங்களையும், தங்கச்சியையும் நல்லா பாத்துக்கங்க. குட் பை' என பென்சிலில் எழுதி வைத்துள்ளார்.
நாங்கள் தற்போது ஏழுமலையின் தற்கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து வருகிறோம். மேலும் ஏழுமலையின் பெற்றோர் கடந்த 3 மாதங்களாக சம்பளத் தொகையை கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். எனவே ஏழுமலையின் தற்கொலைக்கான காரணங்களை பல்வேறு கோணங்களிலும் விசாரணையை மேற்கொண்டு வருகிறோம்' எனக் கூறியுள்ளார் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன்.
குறிப்பு : தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

மற்ற செய்திகள்
