தமிழகத்தையே கதிகலங்க வைத்த இரட்டை கொலை.. 15 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான பரபர தீர்ப்பு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ். இவர் தனது கார் டிரைவரான் சக்திவேல் என்பவருடன் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், திருச்சி வையம்பட்டி பகுதியில் காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர்.
![Trichy murder case punishment after 15 years for accused Trichy murder case punishment after 15 years for accused](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/trichy-murder-case-punishment-after-15-years-for-accused.jpg)
இது தொடர்பாக, சிபிசிஐடி நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி இருந்தது.
திருச்சி திருவரங்கத்தை சேர்ந்த கண்ணன், யமுனா மற்றும் அவரது தாயார் சீதாலட்சுமி ஆகிய மூன்று பேருக்கும் துரைராஜ் மற்றும் சக்திவேல் ஆகியோரின் கொலை வழக்கில் தொடர்பில் இருப்பதும் தெரிய வந்தது.
யமுனாவின் கணவர் தங்கவேல். வைர வியாபாரியான இவர், தனது குடும்பத்தினருடன் திருச்சி மாநகர பகுதியில் வசித்து வந்துள்ளார். மேலும் இவர் துரைராஜிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இதற்கு மத்தியில், பரிகாரம் உள்ளிட்ட விஷயங்களில் நம்பிக்கையுடன் இருந்த தங்கவேலுக்கு கண்ணன் அறிமுகமானதாகவும் கூறப்படுகிறது.
அப்போது, யமுனாவுக்கு திருமணத்தை மீறிய உறவு கண்ணனிடம் உருவாகி உள்ளது. அதே போல, துரைராஜுடனும் யமுனாவுக்கு திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, சில போட்டியும் உருவாக துரைராஜை கொலை செய்ய கண்ணன் மற்றும் யமுனா ஆகியோர் முடிவு செய்துள்ளனர். அதன்படி, துரைராஜ் மற்றும் சக்திவேல் ஆகியோரை அவர்கள் கொலை செய்துள்ளனர்.
மேலும், இதில் யமுனாவின் தாயாரான சீதாலட்சுமியும் உடந்தையாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனைத் தொடர்ந்து, கண்ணன், யமுனா, சீதாலட்சுமி ஆகிய மூன்று பேரையும் கடந்த 2013 ஆம் ஆண்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். யமுனா மற்றும் கண்ணன் ஆகியோர் கடந்த 9 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், வயது முதிர்வு மற்றும் நோய் காரணமாக சீதாலட்சுமி சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.
தொடர்ந்து, இந்த வழக்கு திருச்சி 2 வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசாரணையில் மொத்தம் 80 பேர் சாட்சியம் அளித்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், இருதரப்பு விவாதம் கடந்த 12 ஆம் தேதி முடிந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் கண்ணன் மற்றும் யமுனா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவர்கள் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஜெயக்குமார் தீர்ப்பளித்தார்.
துரைராஜ் மற்றும் சக்திவேல் ஆகியோர் கொலை வழக்கில் யமுனா மற்றும் கண்ணன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் சில கொலை வழக்கும் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. யமுனா மற்றும் கண்ணன் ஆகியோருக்கு இடையேயான உறவு குறித்து யமுனாவின் கணவர் தங்கவேலுக்கு தெரிய வந்த நிலையில், அவரையும் இருவரும் இணைந்து கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)