விவசாய மின் இணைப்பு... யாருக்கெல்லாம் உடனே கிடைக்கும்... தமிழ்நாடு மின் வாரியம் தகவல்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: விவசாயிகள் யாருக்கெல்லாம் மின்சார இணைப்பு கிடைக்கும் என்பது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சாதாரண பிரிவில் 2013 வரையிலும், சுயநிதி பிரிவில் 2018-ம் ஆண்டு வரையிலும், நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு விவசாய மின் இணைப்பு வழங்கப் படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்வாரியம் சாதாரணம் மற்றும் சுயநிதி ஆகிய 2 பிரிவுகளில் விவசாய மின் இணைப்புகளை வழங்குகிறது. சாதாரண பிரிவில் மின்சாரம், மின்வழித் தடங்கள் அமைக்க தேவையான கம்பம், வயர் ஆகியவை இலவசமாக வழங்கப்படும்.
இலவச மின்சாரம்:
சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசமாக வழங்கப்படும். மின்வழித்தட செலவுக்கான கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். இதற்காக, விவசாயிகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் என 3 வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இந்த கட்டணத்தைவிட மின்வழித் தடம் அமைக்க அதிகம் செலவாகிறது.
இதன் காரணமாக, சுயநிதி பிரிவில் தத்கால் என்ற விரைவு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதற்கு மோட்டார் பம்ப் திறனுக்கு ஏற்ப ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாத நிலவரப்படி, விவசாய மின் இணைப்பு கோரி 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன.
சுயநிதி பிரிவில் மின் இணைப்பு:
இந்நிலையில், 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பரில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், சாதாரண பிரிவில் 40 ஆயிரம், சுயநிதி பிரிவில் 60 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
எனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதாரண பிரிவில் 2007-ம் ஆண்டு வரையும், சுயநிதி பிரிவில் 2013-ம் ஆண்டு வரையும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. அதேநேரம், தத்கால் திட்டத்தில் பதிவு மூப்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் முழு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
இந்நிலையில், விண்ணப்பித்த நபர்களின் மறைவு போன்ற காரணங்களால் பலருக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. அவர்களுக்கு பதிலாக மற்றவர்களுக்கு மின் இணைப்பு வழங்கும் வகையில் கூடுதல் சலுகையாக, சாதாரண பிரிவில் 2007-ம் ஆண்டுக்கு பதிலாக 2013-ம் ஆண்டு வரையிலும், சுயநிதி பிரிவில் 2013-ம் ஆண்டுக்கு பதிலாக 2018-ம் ஆண்டு வரையிலும் நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
