தமிழகத்தில் 969 பேருக்கு கொரோனா!... பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!... தலைமை செயலாளர் பரபரப்பு பேட்டி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Apr 11, 2020 07:23 PM

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று தலைமைச் செயலர் சண்முகம் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார்.

tn covid19 positive rises to 969 with total 10 deaths

அப்போது பேசிய சண்முகம், தமிழகத்தில் ஊரடங்கை இரண்டு வாரங்கள் நீட்டிக்க முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடி உடனான ஆலோசனையின் போது வலியுறுத்தினார். ஊரடங்கை ஒரு மாநிலத்தில் மட்டும் கடைபிடித்தால் பலன் கிடைக்காது. அதனால், ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு அறிவிக்கின்ற உத்தரவை தமிழகம் முழுமையாக கடைபிடிக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911இல் இருந்து 969 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அனைத்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் கொரோனா ஆய்வகம் அமைக்க அனுமதிபெற உள்ளோம். தமிழகத்திற்கு வர வேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகள் இன்னும் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. 4 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 50,000 கருவிகள் வர இருக்கின்றன. ரேபிட் டெஸ்ட் கிட் மட்டுமின்றி, பிசிஆர் கருவி மூலமும் பரிசோதனை நடத்தினால் மட்டுமே பரிசோதனை முடிவுகள் தெளிவாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.