நடந்து முடிந்த தேர்தலில் தோல்வி அடைந்த மக்கள் நீதி மய்ய வேட்பாளரின் எடுத்த விபரீத முடிவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பூர் அருகே நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடத்தப்பட்டது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 22 ஆம் தேதி நடைபெற்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் ஆளும் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றது.
தனித்து போட்டியிட்ட நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இந்தத் தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்தது. வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1.82 சதவீதத்தையும் நகராட்சியில் 0.21 சதவீதமும் பேரூராட்சியில் 0.07 சதவீத வாக்குகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சி பெற்றிருந்தது.
வேட்பாளர் தற்கொலை
இந்நிலையில் நடந்து முடிந்த திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 36 வார்டில் மக்கள் நீதி மய்யம் சார்பில் திருப்பூர் கல்லூரி சாலை கொங்கணகிரி பகுதியை சேர்ந்த மணி என்பவர் போட்டியிட்டார்.
இந்நிலையில் மணி, நேற்று இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. நடைபெற்ற நகராட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிட்டு மணி தோல்வியை தழுவியிருந்தது குறிப்பிடத்தக்கது. வாக்கு எண்ணிக்கையில் அவருக்கு 44 ஓட்டுகள் கிடைத்திருந்தன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திருப்பூர் வடக்கு போலீசார் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலில் தோல்வி அடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மற்ற செய்திகள்
