‘நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கு’!.. இனி உணவுப் பொருட்களை இப்படி ‘பார்சல்’ செய்யக்கூடாது.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஹோட்டல் மற்றும் பேக்கரிகளில் உணவு பொருட்களை பார்சல் செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

ஹோட்டல் மற்றும் பேக்கரிகளில் உணவு பொருட்களை பார்சல் செய்யும்போது உமிழ்நீரை பயன்படுத்துவதால் கொரோனா பரவும் அச்சம் இருப்பதாக கூறி, திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் மளிகை கடைகளில் பொருட்களை பார்சல் செய்யும்போது, ஊழியர்கள் பேப்பரை பிரிக்கவும், கவர்களை திறக்கவும் உமிழ்நீரை பயன்படுத்துகின்றனர். இதன்காரணமாக கொரோனா நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கொரோனா தொற்று பாதித்த ஒருவரால் 100 பேர் வரை கொரோனா பரவும் அபாயம் உள்ளது. உணவுப் பொருட்களை பார்சல் செய்யும்போது உமிழ்நீரை பயன்படுத்துவது, கவர்களை பிரிக்க வாயிலிருந்து காற்றை ஊதுவது போன்ற செயல்களால் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது என கூறினார்.
இந்த யோசனைக்காக மனுதாரரை பாராட்டிய நீதிபதிகள் உணவங்கள், பேக்கரிகள் மற்றும் மளிகை கடைகளில் பொருட்களை பார்சல் செய்யும்போது உமிழ்நீரை பயன்படுத்தக்கூடாது என ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

மற்ற செய்திகள்
