மிளகாய் பொடியுடன் வந்த போலி கிறிஸ்துமஸ் தாத்தா.. சர்ப்ரைஸ்-ன்னு காத்திருந்த பாட்டிக்கு வந்த சோதனை..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலம் அருகே கிறிஸ்மஸ் தாத்தா போல வேடம் அணிந்த மர்ம நபர் ஒருவர் வயதான மூதாட்டியிடம் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
![Police searching Disguised as santa claus who steal jewelry Police searching Disguised as santa claus who steal jewelry](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/police-searching-disguised-as-santa-claus-who-steal-jewelry.jpeg)
Also Read | "நான் கொலை செய்யப்படலாம்.. ரிஸ்க் அதிகமா இருக்கு".. அதிர வைத்த எலான் மஸ்க்.. பரபர பின்னணி.!
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகே உள்ள டிவிஎஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பொன் ராணி. தனது வீட்டில் தனிமையில் வசித்து வருகிறார் இவர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் இவரை சந்தித்திருக்கிறார். அப்போது தனது சட்டை பாக்கெட்டில் இருந்த சாக்லேட்டை எடுத்துக் கொடுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டிருக்கிறார் பொன் ராணி.
இதனையடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் தனது இன்னொரு பாக்கெட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து பொன் ராணியின் மீது வீசி இருக்கிறார் அந்த போலி கிறிஸ்துமஸ் தாத்தா. இதனால் அதிர்ச்சியடைந்த பொன் ராணி, பதற்றத்தில் கூச்சலிட்டுள்ளார். அந்த சமயத்தில் அவரது கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் தங்கச் சங்கிலியை அந்த போலி கிறிஸ்துமஸ் தாத்தா பறித்துச் சென்றிருக்கிறார்.
கண்களில் மிளகாய் பொடி விழுந்ததால் சத்தம் போட்ட மூதாட்டி ராணி அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரது நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். பின்னர் அவருக்கு முதலுதவி செய்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்திருக்கின்றனர். உடனடியாக பொன் ராணியின் வீட்டிற்கு விரைந்து வந்த அஸ்தம்பட்டி காவல் நிலைய அதிகாரிகள் இதுகுறித்து விசாரணையில் இறங்கினர்.
தொடர்ந்து, பொன் ராணியின் வீட்டிற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். தன்னிடம் சாக்லேட் கொடுப்பது போன்று தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து வந்த நபர் பெண் போல இருந்ததாக பொன் ராணி காவல்துறை அதிகாரிகளிடத்தில் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் இதுகுறித்து விசாரணையில் இறங்கியுள்ள அஸ்தம்பட்டி காவல்துறையினர் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டதால் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வாழ்த்துக்களையும் பரிசுகளையும் மக்கள் அளித்து வரும் வேளையில் மோசடி நபர் ஒருவர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடத்தில் சென்று மூதாட்டியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)