மாசிமகம் தீர்த்தவாரிக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமிய மக்கள்.. கும்பகோணத்தில் நெகிழ்ச்சி சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கும்பகோணத்தில் மாசிமகம் தீர்த்தவாரிக்கு சென்ற பக்தர்களுக்கு உணவு வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கின்றனர் இஸ்லாமிய மக்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
மாசிமகம்
மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமியன்று திதி கொடுப்பது விசேஷம் என நம்பப்படுகிறது. மேலும், இந்த நாளில் நீர்நிலைகளில் புனித நீராடி கடவுளை வழிபட்டால் பாவங்கள் தீரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக இன்றைய தினத்தில் கும்பகோணத்தில் அமைந்திருக்கும் மகாமக குளத்தில் நீராட பக்தர்கள் திரளாக செல்வது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கும்பகோணத்தில் மகாமக பெருவிழா விமர்சையாக நடைபெற்றது.
அன்னதானம்
மாசிமகத்தை முன்னிட்டு கும்பகோணம் இஸ்லாமிக் சோஷியல் வெல்பேர் அசோசியேசன் சார்பில், மகாமக விழாவிற்கு வந்தவர்களுக்கு, காசி விஸ்வநாதர் கோயில் வடக்கு வீதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பக்தர்களுக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை முஸ்லீம் மக்கள் அளிக்க, மக்களும் நெகிழ்ச்சியுடன் அதனை பெற்றுக் கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் மகாமக தீர்த்தவாரிக்கு பக்தர்களுக்கு இஸ்லாமிக் சோஷியல் வெல்பேர் அசோசியேசன் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நெகிழ்ச்சி
இந்த அன்னதான நிகழ்ச்சிக்கு தலைவர் ஜே.ஜாஹிர் உசேன் தலைமை வகித்து, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, பல்வேறு வகையான சாதம், குடிநீர் பாட்டில்களை வழங்கினார். இந்த நிகழ்வில், நிர்வாகிகள் அபுல் கலாம் ஆசாத், கே. ஜாஹிர் உசேன், அ.சிராஜிதீன், ஏ.பசீர் அகமது உள்பட பலர் பங்கேற்று பக்தர்களுக்கு உணவுகளை வழங்கினர்.
இந்த அன்னதான விழாவில் பக்தர்களுக்கு எலுமிச்சை சாதம், புளிசாதம், தயிர் சாதம் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. ஒருபுறம் மங்கள வாத்தியங்கள் முழங்க சாமி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற, மற்றொரு புறம், முஸ்லீம் மக்கள் பசியுடன் செல்லும் மக்களை அழைத்து உணவளித்தது காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. இந்நிலையில் இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
