ஆன்லைன்ல உணவு... ரூ.75,378 க்கு சிங்கிள் ஆர்டர்... மிரளவைத்த பெங்களூர்வாசி!
முகப்பு > செய்திகள் > வணிகம்பெங்களூருவை சேர்ந்த ஒருவர் ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில் 75,378 ரூபாய்க்கு சிங்கிள் ஆர்டர் செய்திருக்கிறார். இதுவே இந்த ஆண்டின் மிகப்பெரிய தனிநபர் ஆர்டர் எனவும் அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது.

இணையமும் தொழில்நுட்பமும் அதிகரித்ததன் பலனாக பல்வேறு வகையில் மனித குலத்திற்கு நன்மைகள் கிடைத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த வகையில் இணையத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் ஆன்லைன் உணவு டெலிவரி வசதியும் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நம்மால் விரும்பிய உணவுகளை ஆர்டர் செய்திட முடிகிறது. மேலும், ஆன்லைன் மூலமாகவே, அதற்கு பணத்தை செலுத்திவிடவும் முடிகிறது. இந்த எளிமையின் காரணமாகவே பலரும் தற்போது ஆன்லைன் மூலமாக உணவு ஆர்டர் செய்வதை விரும்புகின்றனர்.
இந்நிலையில், பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் பெங்களூருவை சேர்ந்த ஒருவர் தீபாவளி சமயத்தில் ரூபாய் 75,378 க்கு ஒரு ஆர்டர் செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதுவே இந்த ஆண்டில் செய்யப்பட்ட அதிகபட்ச தனிநபர் ஆர்டர் எனவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதேபோல, புனேவை சேர்ந்த ஓருவர் 71229 ரூபாய்க்கு ஃப்ரைஸ் மற்றும் பர்கர்ஸ் ஆகியவற்றை ஆர்டர் செய்திருந்ததாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதனிடையே ஸ்விக்கி ஒன் சேவையின் மூலம் பணம் சேமித்த நகரங்களின் பட்டியலையும் அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஸ்விக்கி ஒன் என்பது ஒருவித சந்தா முறையாகும். இதன் மூலம் பயனர்களுக்கு கூடுதல் சேமிப்புகள் மற்றும் பலன்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் ஸ்விக்கி ஒன் மூலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் ரூ.100 கோடிக்கும் அதிகமாக சேமித்துள்ளனர். இந்த பட்டியலில் 2வது இடத்திலும் மும்பை, 3வது இடத்தில் ஹைதராபாத், 4வது இடத்தில் டெல்லி உள்ளது. தனிநபராக அதிகம் சேமித்ததில் நபராக டெல்லியை சேர்ந்தவர் உள்ளார். இவர் மட்டும் அதிகபட்சமாக ரூ.2.48 லட்சம் வரை சேமித்துள்ளார்.
அதுமட்டும் அல்லாமல் 2022 ல் இந்தியர்கள் ஒரு நிமிடத்துக்கு 137 பிரியாணிகளை ஆர்டர்கள் செய்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது. அதன்படி வினாடிக்கு 2.28 என்ற அளவில் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2021ல் ஒரு நிமிடத்துக்கு 115 பிரியாணிகள் ஆர்டர்கள் பெறப்பட்ட நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்
