மாண்டஸ் புயல்.. அடுத்த 24 மணிநேரம் முக்கியம்.. வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் EXCLUSIVE பேட்டி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் சென்னையில் கன முதல் மிககனமழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார்.
![Mandous Cyclone Chennai MET Department director Interview Mandous Cyclone Chennai MET Department director Interview](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/mandous-cyclone-chennai-met-department-director-interview.jpeg)
தென்மேற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மாண்டஸ் புயலாக வலுவடைந்தது. இந்தப் புயல் மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிக்கோட்டாவிற்கு இடையே இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை நேரங்களில் கரையை கடக்க கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து நமது Behindwoods நிருபரிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன்,"மாண்டஸ் புயல் தற்போது வலுவிழந்து புயலாக சென்னைக்கு தெற்கு தென்கிழக்கே சுமார் 260 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 12 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைவெளியில் கரையை கடக்கும். இது புதுவைக்கும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே உள்ள மாமல்லபுரத்தை ஒட்டி கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை கடக்கும் சமயத்தில் மணிக்கு 65 முதல் 75 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம். சில சமயங்களில் 85 கிலோ மீட்டர் என காற்றின் வேகம் அதிகரிக்கலாம். இதன் காரணமாக அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. வட தமிழக மாவட்டங்களில் கன முதல் மிககனமழையை எதிர்பார்க்கலாம். தர்மபுரி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது" என்றார்.
மேலும், காற்றின் வேகம் குறித்து பேசிய அவர் புயல் கரையை கடக்கும் வேளையில் காற்றின் வேகம் அதிகரித்து பின்னர் படிப்படியாக குறையும் எனவும் சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணிநேரத்தில் கன முதல் மிக கனமழையை எதிர்பார்க்கலாம்" என்றார்.
Also Read | சொதப்பிய மேக்கப்.. கடுப்பான கல்யாண பெண் செஞ்ச காரியம்.. பரபரப்பான கல்யாண வீடு..!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)