அதிர்ஷ்டம் கூரையை பிச்சிட்டு கொட்டும்னு சொல்லுவாங்களே அது இதுதான்.. ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆக்கிய ‘ஒத்த’ சீட்டு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விமான நிலையத்தில் உறவினரை அழைத்து வரும் போது சும்மா வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 10 கோடி ரூபாய் விழுந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. ஓணம் பண்டிகை, கிறிஸ்துமஸ், மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகை உள்ளிட்ட விழா காலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. அதில் குலுக்கல் முறையில் அதிஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மலையாள புத்தாண்டு தினமான விஷு பண்டிகையை முன்னிட்டு, கடந்த மாதம் லாட்டரி விற்பனை செய்யப்பட்டது. அதில் முதல் பரிசாக 10 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நடந்த லாட்டரி குலுக்கலில் ஒருவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 10 கோடி ரூபாய் பம்பர் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அந்த சீட்டை வாங்கியது யார் எனத் தெரியவில்லை. ஒருவாரமாக அந்த அதிர்ஷ்டசாலி யார் என தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த ஒருவர்தான், அந்த பம்பர் பரிசு அடித்த லாட்டரி சீட்டை வாங்கியது என்ற தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அடுத்த பாபுஜி தெருவை சேர்ந்தவர் டாக்டர் பிரதீப்குமார் (வயது 50). இவர் முட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி டாக்டர் லேகா (வயது 45). இவர் மணவாளக்குறிச்சியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.
கடந்த 15-ம் தேதி வெளிநாட்டிலிருந்து ஊருக்கு திரும்பி வந்த உறவினர் ஒருவரை அழைத்து வர திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு பிரதீப்குமார் சென்றார். அவருடன் மைத்துனர் ரமேஷ் (வயது 64) என்பவரும் வந்துள்ளார். அப்போது இருவரும் சேர்ந்து வாங்கிய கேரள லாட்டரி சீட்டை வாங்கியுள்ளனர்.
இதனை அடுத்து கடந்த 22-ம் தேதி குலுக்கல் நடந்தது. அதில், இவர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளது. ஆனால் இந்த லாட்டரியை வாங்கியது யார் என்று தெரியாமல் லாட்டரி ஏஜெண்டு மற்றும் லாட்டரி துறை அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக தேடி வந்தனர். இந்த நிலையில் டாக்டர் பிரதீப்குமார் மற்றும் உறவினர் ரமேஷ் திருவனந்தபுரம் சென்று கேரள மாநில லாட்டரி துறை இயக்குனர் அலுவலகத்தில் லாட்டரி சீட்டை ஒப்படைத்தனர். விமான நிலையத்தில் சும்மா வாங்கிய லாட்டரி சீட்டில் 10 கோடி ரூபாய் விழுந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
