"சின்ன வயசுலேர்ந்து கனவு" - தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர் குறித்த உருக்கமான தகவல்.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Aug 12, 2022 09:47 AM

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரரின் உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இதனிடையே மொத்த கிராமமும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

I will enroll my elder son in army says Lakshman father

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ராஜௌரி மாவட்டத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. இன்று காலை பயங்கரவாதிகள் இந்த முகாமை தாக்கிய நிலையில் இந்திய ராணுவ வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரைபில் மேன் லட்சுமணன் மற்றும் பேதார் ராஜேந்திர பிரசாத், ரைபில் மேன் மனோஜ் குமார் ஆகிய 3 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

தமிழக வீரர்

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மூன்று பேரில் ஒருவரான லட்சுமணன் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். தாக்குதலில் லட்சுமணன் உயிரிழந்த நிலையில் அவரது சொந்த கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்நிலையில், இன்று லட்சுமணனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த லட்சுமணனின் பெற்றோர் தர்மராஜ் - ஆண்டாள் ஆவர். பிபிஏ முடித்த லட்சுமணன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறார். இரட்டை சகோதரர்களான லட்சுமணன் - ராமன் இருவருக்குமே ராணுவத்தில் சேரவேண்டும் என்பதே கனவாக இருந்திருக்கிறது. இதில் லட்சுமணனுக்கு வாய்ப்பு கிடைக்கவே அவர் முதலில் பணியில் சேர்ந்திருக்கிறார். இவர்களில் மூத்தவரான ராமன் விவசாய வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டே ராணுவத்தில் சேர பயிற்சி பெற்று வருகிறார்.

உருக்கம்

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் சொந்த ஊருக்கு வந்துவிட்டு சென்ற லட்சுமணன். நேற்று முன்தினம் தனது தாயுடன் போனில் பேசியிருக்கிறார். இதனிடையே தீவிரவாத தாக்குதலில் லட்சுமணன் உயிரிழக்கவே அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இதுகுறித்து பேசிய லட்சுமணனின் தந்தை தர்மராஜ்," என்னுடைய இரண்டு மகன்களையும் ராணுவத்தில் சேர்க்க நினைத்தேன். சிறுவயது முதலே அவர்களது கனவாகவும் அது இருந்தது. முதலில் லட்சுமணனுக்கு தான் வாய்ப்பு கிடைத்தது. அவரால் முழுமையாக பணிபுரிய முடியாமல் போனாலும், நாட்டுக்காக உயிர் தியாகம் செய்திருப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன். வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய மூத்த மகனையும் ராணுவத்துக்கு அனுப்புவேன். லட்சுமணன் விட்டுச் சென்ற பணியை ராமன் நிறைவு செய்வான்" என்றார் உருக்கமாக.

வீரமரணம் அடைந்த லட்சுமணன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 20 லட்சம் நிதி அறிவித்துள்ளது. நிதியை வழங்க மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர் மற்றும் அமைச்சர்கள், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்பி. உதயகுமார், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் உள்ளிட்டோர் இன்று புதுப்பட்டிக்கு செல்ல இருக்கின்றனர்.

Tags : #ARMY #SOLDIER #LAKSHMAN #ராணுவம் #தமிழகவீரர் #லட்சுமணன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. I will enroll my elder son in army says Lakshman father | Tamil Nadu News.