“போன் தொலைஞ்சா இத மட்டும் உடனே பண்ணுங்க”.. எஸ்பி கொடுத்த சூப்பர் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பொதுமக்கள் தங்களது மொபைல் போன்கள் தொலைந்துவிட்டால் அதன் பின்னர் என்ன செய்ய வேண்டும் என வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் அறிவுரை வழங்கியுள்ளார்.
![File police complaint after losing phones says Vellore SP File police complaint after losing phones says Vellore SP](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/file-police-complaint-after-losing-phones-says-vellore-sp.jpg)
வேலூர் மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் திருடுபோன செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் அந்த மாவட்ட சைபர் பிரிவு போலீசார் சமீப காலமாக நடவடிக்கை எடுத்து வந்தனர். இதன் அடிப்படையில் கடந்த மூன்று மாதங்களில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடுபோன சுமார் 9 லட்சம் மதிப்புள்ள 60 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இவற்றை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
60 செல்போன்கள்
கடந்த மூன்று மாத காலத்தில் தங்களது செல்போன்களை தொலைத்துவிட்டதாக மற்றும் திருடு போனதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட சைபர் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் கண்டுபிடிக்கப்பட்ட 60 செல்போன்களை உரிய சரிபார்ப்புகளுக்குப் பிறகு உரிமையாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் கலந்து கொண்டார்.
புகார்
இந்த நிகழ்ச்சியில் பேசிய வேலூர் மாவட்ட எஸ்பி ராஜேஷ் கண்ணன் "மொபைல் போன்களை திருடுபவர்கள் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதை மாற்றி விடுகிறார்கள். அப்படி மாற்றப்படும் மொபைல் போன்களை வேறு யாராவது பயன்படுத்த தொடங்கி விட்டால் அதை உடனடியாக மீட்க முடியும். இதற்கு செல்போனைத் தவறவிட்டவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். தங்களது செல்போனில் ஐஎம்இஐ எண் அல்லது காணாமல் போன மொபைல் போனில் உள்ள தொலை பேசி எண்ணை வைத்து புகார் அளிக்கலாம். நேரில் புகார் அளிக்க வேண்டும் என தேவையில்லை. இணையதளம் மூலமாகவும் காணாமல் போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்கலாம்" என்றார்.
உடனே நடவடிக்கை
பொதுமக்கள் தங்களது காணாமல்போன செல்போன்கள் குறித்து புகார் அளித்த உடனேயே சைபர் பிரிவு போலீசார் இதுகுறித்த விசாரணையைத் தொடங்கி விடுவார்கள் என குறிப்பிட்ட எஸ்பி "காணாமல் போன மொபைல் போன்கள் ஆன் செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் அது எப்படிப்பட்ட மொபைல் ஆக இருந்தாலும் எங்களால் கண்டுபிடிக்க முடியும். ஆகவே பொதுமக்கள் செய்ய வேண்டியது செல்போன் காணாமல் போன உடனே அதன் ஐஎம்இஐ எண்ணை வைத்து விரைவாக புகார் அளிக்க வேண்டும்" என்று கூறினார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)