இந்த நேரத்துல ஏன் கோலி இப்படியொரு முடிவு எடுத்தார்..? ‘எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு’.. முன்னாள் இந்திய வீரர் ஆதங்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய டி20 அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகுவதாக அறிவித்தது குறித்து முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
![What happens if we win T20 World Cup 2021? Pathan has questioned What happens if we win T20 World Cup 2021? Pathan has questioned](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/what-happens-if-we-win-t20-world-cup-2021-pathan-has-questioned.jpg)
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli), டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார். இதுகுறித்து ட்விட்டரில் அறிக்கை வெளியிட்ட அவர், ‘இந்திய அணியில் விளையாடுவது, அணியை வழி நடத்தியது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம். இதுவரை எனக்கு ஆதரவு அளித்த சக வீரர்கள், நிர்வாகக்குழு, தேர்வுக்குழு, பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி. நாங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைத்த ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி, நீங்கள் இல்லாமல் இதை செய்திருக்க முடியாது.
கடந்த 8-9 ஆண்டுகளாக மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி வருவதால், அதிக வேலைப்பளு இருப்பதை உணர்கிறேன். அதில் 5-6 ஆண்டுகளாக கேப்டனாக செயல்பட்டு வருகிறேன். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை சிறப்பாக வழி நடத்த எனக்கு சற்று வேலை குறைப்பு தேவைப்படுவதாக நினைக்கிறேன்.
அதனால் வரும் அக்டோபர் மாதம் துபாயில் நடைபெற டி20 உலகக்கோப்பை தொடருடன் டி20 கேப்டன் பதவில் இருந்து விலகுகிறேன். கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், ஒரு பேட்ஸ்மேனாக அணிக்கு என் பங்களிப்பை முழுமையாக அளிப்பேன்’ என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். கோலியின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் (Irfan Pathan), கோலியின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்த நேரத்தில் கோலி இப்படியொரு முடிவு எடுத்தது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. ஒருவேளை டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியா வெற்றி பெற்றுவிட்டால் என்ன நடக்கும்? கோலி ஒரு சிறந்த கேப்டன். அவரின் தலைமையின் கீழ் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய முன்னேறியுள்ளோம்.
பொதுவாகவே ஐசிசி தொடர்களின் கோப்பையை அவர் கைப்பற்றவில்லை என்ற விமர்சனம் வைக்கப்படுகிறது. இந்த முடிவை எடுக்குமுன் அவர் நிறைய யோசித்திருப்பார், இது யாருக்கும் அவ்வளவு சுலமான காரியம் கிடையாது. இந்த டி20 உலகக்கோப்பையை வென்று, கோலியின் பெருமையை காப்பாற்றுவோம் என நம்புகிறேன்’ என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)