'கிரிக்கெட் விளையாடல, பணம் தான் விளையாடுது'... 'பாகிஸ்தானுக்கு சொன்னதை, இந்தியாவுக்கு சொல்ல முடியுமா'?... கொந்தளித்த பிரபல வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தானில் பாதுகாப்பில்லை எனக் கூறும் வீரர்கள், அதே போல இந்தியாவைப் பற்றிப் பேச முடியுமா எனக் காட்டமாகக் கேட்டுள்ளார் உஸ்மான் கவாஜா.
![Usman Khawaja Reacts To New Zealand Pulling Out Of Pakistan Tours Usman Khawaja Reacts To New Zealand Pulling Out Of Pakistan Tours](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/usman-khawaja-reacts-to-new-zealand-pulling-out-of-pakistan-tours-1.jpg)
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து அணி விளையாடத் திட்டமிட்டிருந்தது. அந்த வகையில் ஒருநாள் தொடர் தொடங்க இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு போட்டியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தொடரை ரத்து செய்தது. இந்த நிகழ்வு சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையாக மாறியது.
இதையடுத்து பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்ததால், இந்த முடிவை எடுத்திருப்பதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விளக்கமளித்திருந்தது. இந்த நிகழ்வு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பெரும் அதிர்ச்சியில் தள்ளியது. ஆனால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் நவம்பர், டிசம்பரில் மேற்கொள்ள இருந்த பாகிஸ்தான் பயணத்தையும் ரத்து செய்தது.
இரு நாடுகளும் போட்டியை ரத்து செய்ததால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பெரும் நெருக்கடியையும், நிதி ரீதியாக பெரும் இழப்பும் ஏற்பட்டது. இதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் தங்கள் ஆதங்கத்தைக் கொட்டி வந்த நிலையில், ஆஸ்திரேலிய வீரரும், பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவருமான உஸ்மான் கவாஜா நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ''பாகிஸ்தானுக்குச் செல்லாதீர்கள் என வீரர்களும், கிரிக்கெட் அமைப்புகளும் எளிதாகக் கூறிவிடுகிறார்கள். இதே போன்ற ஒரு அச்சம் இந்தியாவில் ஏற்பட்டால் யாரும் போட்டியை ரத்து செய்யப்போவதில்லை. அங்குப் பயணம் செய்து விளையாடாமல் இருக்க வேண்டாம் என்றும் யாரும் கூறப்போவதில்லை. பணம்தான் பேசுகிறது. அது நாம் அனைவருக்கும் தெரியும். அதுதான் மிகப்பெரிய பங்கும் வகிக்கிறது.
பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாடலாம், பாதுகாப்பானது என ஒவ்வொரு முறையும் அவர்கள் கிரிக்கெட் தொடரை நடத்தி நிரூபித்து வருகிறார்கள். ஆனால், பாகிஸ்தானில் தொடரை ரத்து செய்ததற்கு எந்தக் காரணமும் இருக்க முடியாது. பாகிஸ்தானில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் தனித் தனி பாதுகாப்பு உள்ளது. எந்த வீரரும் தான் பாதுகாப்பாக இல்லை எனக் கூறியதாக எந்த தகவலும் இல்லை.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 100 சதவீதம் பாதுகாப்பாக இருப்பதாக ஒவ்வொரு வீரர்களும் உணர்கிறார்கள். நானும் அங்குதான் பிறந்தேன். ஆஷஸ் தொடருக்குப் பின் ஆஸ்திரேலிய அணியும் பாகிஸ்தான் பயணம் செய்து விளையாட உள்ளது'' என கவாஜா கூறியுள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)