ஐபிஎல் மினி ஏலம் : வரலாறு படைத்த சுட்டிக் குழந்தை சாம் குர்ரான்.. ஆத்தாடி இத்தனை கோடியா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரை சுற்றியுள்ள பணிகள் மிக மும்முரமாக நடைபெற்று வருகிறது. இன்று (23.12.2022) ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்று வரும் நிலையில், மொத்தமுள்ள 10 அணிகளும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்ய போகிறது என்பதை அறியவும் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர்.
![Sam Curran sold for punjab kings 185 millions create history Sam Curran sold for punjab kings 185 millions create history](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/sam-curran-sold-for-punjab-kings-185-millions-create-history.jpeg)
2022 ஆம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி அசத்தி இருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஐபிஎல் மினி ஏலம் குறித்த தகவல் வெளியாகி இருந்த நிலையில், அனைத்து அணிகளுமே தங்கள் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் மற்றும் விடுவித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டிருந்தது. இதற்கடுத்து, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த கூடிய ஒரு பகுதி தான் இந்த ஏலம். ஒவ்வொரு அணிகளும் சிறந்த வீரர்களை எடுக்க கடுமையாக போட்டி போடவும் செய்வார்கள்.
இதில் பல வீரர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளதால், மிகவும் ஆவலுடன் ஏலத்தை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரான் அதிக தொகைக்கு ஏலம் போய் வரலாறு படைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடி வந்த சாம் குர்ரான், கடந்த சீசனில் ஆடவில்லை. இதற்கடுத்து தற்போது மினி ஏலத்தில் சாம் குர்ரான் இடம்பெற அவரை எடுக்க கடும் போட்டி இருக்கும் என்ற நிலை இருந்தது. இதற்கு காரணம், சர்வதேச தொடர்களில் சிறந்த ஆல் ரவுண்டராக அவர் நிலை நிறுத்திக் கொண்டது தான்.
அப்படி இருக்கையில், ஐபிஎல் ஏலத்தில் சாம் குர்ரான் பெயரை சொன்னதும் பஞ்சாப், மும்பை உள்ளிட்ட பல அணிகள் போட்டி போட்டது. நடுவே சிஎஸ்கேவும் களத்தில் குதிக்க, போட்டி அசத்தலாக மாறி இருந்தது. தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணி சாம் குர்ரானை எடுக்க முனைப்பு காட்டிக் கொண்டே இருக்க, கடைசியில் 18.50 கோடி ரூபாய்க்கு அவரை பஞ்சாப் அணியே எடுத்திருந்தது.
ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே அதிக தொகைக்கு போன வீரராக சாம் குர்ரான் தற்போது மாறி வரலாறு படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)