'தொல்ல' தாங்க முடில... பேசாம பேன்ஸ் இல்லாம 'ஐபிஎல்' நடத்திரலாமா?... ரூம் போட்டு 'யோசிக்கும்' பிசிசிஐ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Mar 06, 2020 08:49 PM

கொரோனா வைரஸ் இந்தியாவையும் தற்போது ஆட்டிப்படைத்து வருவதால் ஐபிஎல் போட்டிகளை எப்படி நடத்துவது? என பிசிசிஐ ரூம் போட்டு ஆலோசித்து வருகிறதாம்.

BCCI To Take Necessary Steps Against Coronavirus, says Ganguly

சீனாவை ஆட்டிப்படைத்த கொரோனா தற்போது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இதனால் ஒலிம்பிக் போட்டிகள் கூட நடக்குமா? என்ற சூழல் உருவாகியுள்ளது. மறுபுறம் இத்தாலியில் நடைபெற்று வரும் ஏ சீரிஸ் கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் யாரும் இல்லாமல் மூடப்பட்ட மைதானத்துக்குள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கூடி கண்டுகளிக்கக் கூடிய ஐபிஎல் போட்டிகளில் கொரோனா வைரஸ் பரவி விட்டால் என்ன செய்வது? என்று பிசிசிஐ தற்போது அதிதீவிரமாக யோசித்து வருகிறதாம். இதுதவிர வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்து தங்கி விளையாடக்கூடிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒருவேளை இந்தியா வந்து கொரோனா தொற்று ஏற்பட்டால் அதை எப்படி சமாளிப்பது? என்ற கவலையும் பிசிசிஐயை ஆட்டிப்படைத்து வருகிறது. இதையெல்லாம் சமாளித்து ஐபிஎல்லை நடத்தினாலும், போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு கொரோனா இல்லை என்பதை எப்படி கண்டறிவது என்பது தான் தற்போது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

கொரோனா வைரசால் ஐபிஎல் போட்டிகள் தடைபட்டாலோ, அல்லது ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டாலோ  அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பு பல மடங்காக இருக்கும். அதை விட, ஐபிஎல் போட்டிகளால் கொரோனா பரவினால் அதுவும் பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இதற்கு வேறுவழி என்ன என்று பிசிசிஐ விளையாட்டு அமைச்சகத்திடம் கேட்க, அவர்கள் சுகாதார அமைச்சகத்தை கைகாட்டி இருக்கிறார்களாம். 'மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி' என்பது போல இந்த பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தீவிர ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் இவை எதையும் வெளியில் காட்டிக்கொள்ளாமல் பிசிசிஐ தலைவர் கங்குலி, ''ஐபிஎல் போட்டி குறிப்பிட்ட தேதியில் தொடங்கும். எல்லா இடங்களிலும் கிரிக்கெட் தொடர்கள் நடைபெற்று வருகின்றன. நாங்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுப்போம்,'' என தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.