காலையில கூட 'வீடியோ கால்' பண்ணி பேசுனீங்களே...! 'ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த 27 வயது வீரர்...' - கதறும் குடும்பம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாய் தேஜா, ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம், குரபல கோட்டா மண்டலம், எகுவ 'ரேகுல' கிராமத்தை சேர்ந்தவர் ஆவார்.

விவசாய குடும்பத்தில் பிறந்த இவருடைய இரு சகோதர்களும் ராணுவத்தில் பணியாற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் இவரும் கடந்த 2013-ல் ராணுவத்தில் சேர்ந்தார்.
அதன்பின்னர், படிப்படியாக ‘லான்ஸ் நாயக்’ பதவிக்கு உயர்ந்துள்ளார். நம்பிக்கைக்குரிய இவர், முப்படை தளபதி பிபின் ராவத்தின் பாதுகாப்பு அதிகாரியாக பணியில் அமர்த்தப்பட்டார்.
இந்த நிலையில், நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இவரும் உயிரிழந்தார். இவருக்கு திருமணமாகி,சர்மிளா என்ற மனைவியும் 4 வயதில் ஆண்குழந்தையும் 2 வயதில் பெண் குழந்தைகளும் உள்ளனர்.
ராணுவ அதிகாரி சாய் தேஜா ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தகவல் மதனபள்ளியில் வசிக்கும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதை அறிந்த அவரது மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
கடந்த செப்டம்பரில் விநாயகர் சதுர்த்திக்கு சொந்த ஊருக்கு வந்து சென்ற சாய் தேஜா, மீண்டும் பொங்கல் பண்டிகைக்கு வருவதாக கூறியுள்ளார். சாய் தேஜா இறப்பதற்கு முன்னதாக அவரது மனைவியிடமும் குழந்தைகளிடமும் வீடியோ கால் மூலம் நேற்று (புதன்கிழமை) காலை பேசியுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் அதற்குள் இந்த கோர விபத்து நடந்து விட்டதாக கூறி அவரது மனைவி கதறி அழுதது அனைவரின் நெஞ்சையும் உலுக்கியது. மதனபள்ளிக்கு அவர் உடல் இன்று அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெலிகாப்டர் விபத்து எப்படி நடந்தது?: நீலகிரி மாவட்டம், குன்னுார், வெலிங்கடனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லுாரி இயங்கி வருகிறது. இங்கு புதன்கிழமை(நேற்று) நடக்க இருந்த ராணுவ உயரதிகாரிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் நான்கு பைலட்கள் உள்பட 14 பேர், கோவை மாவட்டம், சூலுாரிலுள்ள ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து, 11.30 மணியளவில் ஹெலிகாப்டரில் வெலிங்டன் புறப்பட்டனர்.
விமானம் தரையிறங்க ஐந்து நிமிடம் இருக்கும் போது, அதாவது குன்னுார் மலைப்பாதையிலுள்ள காட்டேரி பள்ளத்தாக்குக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது, கடும் மேகமூட்டம் காணப்பட்டது. இதனால், ஏற்பட்ட காலநிலை குழப்பம் காரணமாக, ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறி பற்றி எரிந்தது.
இதில் பயணம் செய்த பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். விமானத்தின் விமானி வருண் மட்டுமே படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த 13 பேரில் சாய் தேஜாவும் ஒருவர் ஆவார். மரணம் அடைந்த 13 பேருக்கும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மற்ற செய்திகள்
