"இத வச்சு நான் என்ன பண்றது"..? ஆன்லைனில் லேப்டாப் ஆர்டர் போட்டவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. பாவம்யா மனுஷன்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆன்லைனில் லேப்டாப் ஆர்டர் செய்த நபர் ஒருவருக்கு துணி துவைக்கும் சோப்புகளை அனுப்பி வைத்திருக்கிறது இணைய வழி வர்த்தக நிறுவனம் ஒன்று. பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து எழுதிய பதிவு தற்போது சமூக வலை தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இணையவழி வர்த்தகம்
இந்தியாவில் பண்டிகை காலம் எப்போதுமே பெரும் வணிகத்தினை உள்ளடக்கியது. வீட்டுக்குத் தேவையான பொருட்களை பண்டிகை காலங்களில் வாங்குவதையே மக்கள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க, இணையவழி வர்த்தக நிறுவனங்களும் பண்டிகை தினங்களை முன்னிட்டு சிறப்பு ஆபர்களை அளிப்பதை வாடிக்கையாக செய்துவருகின்றன. ஆனால், இந்த நடைமுறையில் சில நேரங்களில் தவறுகளும் நேரத்தான் செய்கின்றன.
டெல்லியை சேர்ந்தவர் யஷஸ்வி சர்மா. அகமதபாத்தில் உள்ள ஐஐஎம்-ல் பயின்ற இவர் தனது தந்தைக்கு பிரபல இணைய வழி வர்த்தக நிறுவனம் ஒன்றின் மூலம் லேப்டாப் ஆர்டர் செய்திருக்கிறார். இந்த ஆர்டரை 'ஓப்பன் பாக்ஸ்' முறையில் போட்டிருக்கிறார் அவர். அதாவது, பார்சலை எடுத்துவரும் ஊழியர் அதனை பிரித்து வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தான் ஆர்டர் செய்திருந்த பொருள் சரியாக டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்பதை உணர்த்த வாடிக்கையாளருக்கு ஓடிபி ஒன்று வரும். இதனை அந்த டெலிவரி ஊழியரிடம் சொல்லவேண்டும்.
துணி துவைக்கும் சோப்
சர்மாவின் பார்சலை அவரது தந்தை வாங்கியிருக்கிறார். அப்போது பார்சலை டெலிவரி செய்த நபர் பிரித்துக்காட்டவில்லை எனவும், தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார் சர்மா. இந்நிலையில், அந்த பார்சலில் துணி துவைக்கும் சோப்கள் இருந்திருக்கின்றன. இதனை அந்நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்றும் பலன் கிடைக்கவில்லை என தன்னுடைய பதிவில் சர்மா குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், இது தன்னுடைய தந்தையின் தவறுதான் எனவும், அவர் பார்சலை பிரித்து பார்த்து வாங்கிய பின்னரே ஓடிபியை சொல்லியிருக்கவேண்டும் எனவும் அந்த பதிவில் சர்மா குறிப்பிட்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல், டெலிவரி செய்யப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் அதன் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் எடுக்க இருப்பதாகவும் சர்மா தெரிவித்திருந்தார். இவருடைய பதிவு சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் பணத்தினை திரும்ப அளிப்பதாக அறிவித்திருப்பதாக சர்மா சமீபத்திய பதிவில் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், தனது உறவினர் இதுபற்றி போதிய ஆதாரங்களுடன் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாகவும், தனக்கு இன்னும் பணம் வந்துசேரவில்லை எனவும் சர்மா வேதனை தெரிவித்துள்ளார்.
Also Read | ரூ.2000 கோடி திட்டம்.. விண்கலத்தை சிறுகோளில் மோதச்செய்த நாசா.. திகைக்க வைக்கும் வீடியோ..!

மற்ற செய்திகள்
