கடலுக்கடில நடந்த விபரீதம்.. ஒரு கிலோமீட்டருக்கு கொந்தளித்த கடல்.. மொத்த ஐரோப்பாவும் இப்போ பயத்துல தான் இருக்கு..!
முகப்பு > செய்திகள் > உலகம்பால்டிக் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பது மொத்த ஐரோப்பாவையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இது பல சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது.

பால்டிக் கடல்
உலக பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஒரு பகுதிதான் இந்த பால்டிக் கடல். ரஷ்யா, டென்மார்க், போலந்து, நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே இந்த கடல் பரவியுள்ளது. ரஷ்யாவின் எரிவாயு குழாய் இந்த கடல் வழியே ஐரோப்பாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாக டென்மார்க் அதிகாரிகள் அறிவித்திருக்கின்றனர். மேலும், இது நாசவேலையாக இருக்குமோ என்ற அச்சமும் பல ஐரோப்பிய நாட்டின் அதிகாரிகளிடையே எழுந்துள்ளது.
ரஷ்யா - டென்மார்க் இடையே 1220 கிலோமீட்டர் நீளும் இந்த நார்ட் ஸ்ட்ரீம் பைப்லைன்-ன் இரண்டு இடத்தில் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதனால் சுமார் ஒருகிலோமீட்டருக்கு கடல் கொந்தளிப்புடன் இருப்பதாக டென்மார்க் ஆயுதப்படை அறிவித்துள்ளது. மேலும், இந்த வெடிப்பு நடந்திருக்கும் அருகில் செல்லவேண்டாம் எனவும் டென்மார்க் கடற்படை அறிவுறுத்தி வருகிறது.
கசிவு
உப்சாலா பல்கலைக்கழகத்தில் உள்ள தேசிய நில அதிர்வு மையம் பால்டிக் கடலில் இரண்டு வெடிப்புகளைப் பதிவு செய்ததாக அறிவித்துள்ளது. முதல் வெடிப்பு திங்கள்கிழமை அதிகாலை டேனிஷ் தீவான போர்ன்ஹோல்முக்கு அருகிலும் இரண்டாவது சில மணி நேரம் கழித்து நேர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன், கசிவுகள் தற்செயலானவை என நம்புவதற்கு கடினமானது என்று கூறினார். டென்மார்க்கின் எனர்ஜி ஏஜென்சியின் இயக்குனர் கிறிஸ்டோபர் போட்சாவ் இதுபற்றி பேசுகையில்,"கடலுக்கடியே பதிக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயில் கசிவு ஏற்படுவது மிக மிக அரிதானது" எனத் தெரிவித்திருக்கிறார்.
எச்சரிக்கை
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் இதுபற்றி பேசுகையில், "நோர்ட் ஸ்ட்ரீம் குழாய்களில் கசிவுகள் நாசவேலையால் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பிய எரிசக்தி உள்கட்டமைப்பை வேண்டுமென்றே சீர்குலைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது பதிலடி தரும் சூழ்நிலையை உருவாக்கும்" என எச்சரித்துள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது ஏராளமான பொருளாதார தடைகளை விதித்துவந்த நிலையில், பால்டிக் கடலில் ஏற்பட்டுள்ள இந்த கசிவு உலக அளவில் பேசுபொருளாகியுள்ளது.
Also Read | ரூ.2000 கோடி திட்டம்.. விண்கலத்தை சிறுகோளில் மோதச்செய்த நாசா.. திகைக்க வைக்கும் வீடியோ..!

மற்ற செய்திகள்
