‘அருவி’ திரைப்பட இயக்குநரின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ‘அருவி’ திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மக்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் அதிதி பாலன், அஞ்சலி வரதன், லக்ஷ்மி கோபாலசுவாமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்நிலையில், அருண் இயக்கத்தில் உருவாகவிருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படங்களை தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் அடுத்த படத்தை அருண் இயக்கவிருக்கிறார்.
இது தொடர்பான அறிவிப்பு இன்று நடைபெற்ற ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார். இயக்குநர் அருண் பிரபு மற்றும் சிவகார்த்திகேயன் பள்ளிப்பருவத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.