களைக்கட்டிய கலைவாணர் விழா..! - பிரம்மிப்பில் நெகிழ்ந்த பாரதிராஜா
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 30, 2019 01:10 PM
மறைந்த நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கே-வின் பிறந்தநாளை முன்னிட்டு தி.நகர் சோஷியல் கிளப்பில் நகைச்சுவை நடிகர்கள் தினமாக கலப்பை மக்கள் இயக்கம் கொண்டாடியது. இந்த விழாவிற்கு பாரதிராஜா தலைமை தாங்கினார்.

இவ்விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, நகைச்சுவை நடிகர் மட்டுமின்றி, தன்னிடம் இருப்பதை பிறருக்கு வழங்கி வள்ளலாக வாழ்ந்தவர் என்.எஸ்.கே. அவருக்கு இப்படியொரு பிரமிப்பான விழாவை நடத்துவது உண்மையிலே மகிழ்ச்சியாக உள்ளது. கிட்டத்தட்ட 108- நகைச்சுவை கலைஞர்களுக்கு பரிசளித்து நகைச்சுவை கலைஞர்களை ஒரே இடத்தில் சங்கமிக்க வைத்தது ஆச்சர்யமாக உள்ளது. பி.டி.செல்வகுமாரின் அன்புக்கு கட்டுப்பட்டு கலந்து கொண்டேன். இந்த விழாவில் கலந்து கொண்டமைக்காக நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைகிறேன். முதலில் புதுமைப்பெண் படத்தின் கதையை ஜெயலலிதா அம்மையாருக்குத்தான் சொன்னேன். சொன்னதை அப்படியே கொடுங்கள் சிறப்பாக இருக்கும் என்றார். அந்த படத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதும், ரேவதியை வைத்து படமாக்கினேன்’ என்றார்.
மேலும், நடிகர் எஸ் வி சேகர் கூறுகையில், ‘நகைச்சுவை என்பது நமது உடலை மனதை வாழ்க்கையை உற்சாகமாக வைப்பதாகும். என்.எஸ்.கே சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். தான் சம்பாதித்து வைத்ததை தனக்காக மட்டும் இல்லாமல் மக்களுக்காக செலவு செய்து வறுமையால் வாடியவர். பொதுவாக நகைச்சுவை நடிகர்களின் வாழ்வில் பல சோகம் இருக்கும். அந்த சோகம் முகத்தில் தெரிந்தால் காமெடி ட்ராஜடியாகிவிடும். இவ்வளவு நகைச்சுவை நடிகர்கள் ஒரே இடத்தில் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படியொரு அற்புதமான விழாவை ஏற்பாடு செய்த பி.டி.செல்வகுமாரின் கலப்பை மக்கள் இயக்கத்திற்கு தனது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
இந்த விழாவை கலப்பை மக்கள் இயக்கம் சார்பாக ஏற்பாடு செய்த பி.டி.செல்வகுமார், விஜயமுரளி ,டைமண்ட் பாபு ,நெல்லை சுந்தரராஜன், ரமேஷ் கண்ணா ,பவர் ஸ்டார், பெஞ்சமின், ஆர்த்தி கணேஷ், சிசர் மனோகர் இசையமைப்பாளர்கள் சிற்பி, சுந்தர்.சி, சித்ரா லக்ஷ்மணன் , முத்துக்காளை,கிங்காங்,லக்ஷ்மணன் , பயில்வான் ரங்கநாதன் , போண்டாமணி ,வெங்கல்ராவ் மற்றும் ஏராளமான நடிகர்கள் கலந்துக் கொண்டிருந்தனர்.