‘சாதாரண குடும்பத்துல இருந்து வந்தவருக்கு’.. ‘அதப்பத்தி எல்லாம் என்ன தெரியும்..?’ பிசிசிஐ சாடியுள்ள முன்னாள் வீரர்..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Saranya | Aug 03, 2019 11:10 PM
ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இளம் வீரர் பிருத்வி ஷாவுக்கு இந்திய அணியில் விளையாட 8 மாத காலம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
![Prithvi Shaws suspension is harsh Dilip Vengsarkar Prithvi Shaws suspension is harsh Dilip Vengsarkar](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/photo-prithvi-shaws-suspension-is-harsh-dilip-vengsarkar.jpg)
பிருத்வி ஷாவுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமூட்டும் தன்மையுடைய இருமல் மருந்தை உட்கொண்டது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு இந்திய அணியில் விளையாட நவம்பர் 15ஆம் தேதி வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது. இளம்வீரரான பிருத்வி ஷா இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் திலீப் வெங்சர்கர், “பிருத்வி ஷாவின் எளிமையான குடும்பப் பின்னணி மற்றும் வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு குறைந்தபட்ச தண்டனை அளித்திருக்க வேண்டும். சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வரும் வீரர்களிடம் தடை செய்யப்பட்ட மருந்துகள் குறித்த விவரங்களை மாநில அளவிலான கிரிக்கெட் அமைப்போ, தேசிய கிரிக்கெட் அகாடமியோ அல்லது பயிற்சியாளர்களோ தெரிவித்திருக்க வேண்டும்.
இருமல் மருந்தில் என்ன இருக்கும் என்பது சாதாரண குடும்ப பின்னணியிலிருந்து வரும் வீரர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருக்கு 8 மாத தடை என்பது அதிகம். அதை 3 அல்லது 4 மாதங்களாகக் குறைத்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார். சர்வதேச அளவில் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 237 ரன்கள் எடுத்துள்ள பிருத்வி ஷா அதில் ஒரு சதமும் அடித்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)