பிரிட்டன் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு.. இறுதிச் சுற்றில் இந்தியரான ரிஷி சுனக்.. அடுத்தது என்ன?
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டன் பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பில் இறுதிச் சுற்றில் நுழைந்திருக்கிறார் இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட ரிஷி சுனக்.

இங்கிலாந்து பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ம் ஆண்டு பதவியேற்றார். இந்நிலையில், பல்வேறு சிக்கல்கள் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாகவும், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை பிரதமர் பதவியில் நீடிக்க இருப்பதாகவும் கடந்த வாரம் அறிவித்திருக்கிறார். இதனையடுத்து கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பிரதமர் பதவிக்கு போட்டிபோட்டு வருகின்றனர். இதில் இந்திய பூர்வீகத்தை சேர்ந்த ரிஷி சுனக்-கும் ஒருவர்.
ரிஷி சுனக்
இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் பகுதியில் பிறந்த ரிஷி சுனக், வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 2015 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த ரிஷி, குறுகிய காலத்தில் பல உயரங்களை அடைந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.
முன்னணி
கடந்த 7 ஆம் தேதி, போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி புதிய பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடத்திவருகிறது. பல கட்டமாக நடைபெறும் இந்த வாக்கெடுப்பில் இறுதியாக தேர்ந்தெடுக்கப்படும் இரண்டு உறுப்பினர்களில் இருந்து ஒருவரை அந்த கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள்.
ஏற்கனவே நடைபெற்ற மூன்றாம் கட்ட வாக்கெடுப்பில் ரிஷி முதலிடத்தை பிடித்திருந்த நிலையில் நேற்று நான்காம் கட்ட வாக்கெடுப்பு நடைபெற்றிருக்கிறது. இதில் ரிஷியுடன் சேர்த்து மொத்தம் 3 பேர் போட்டியிட்டனர். வெளியுறவு செயலாளர் லிஸ் டிரஸ் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் பென்னி மோர்டான்ட் மற்றும் பிரிட்டனின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி ஆகியோர் வாக்கெடுப்பில் போட்டியிட்டனர்.
வெற்றி
இந்த வாக்கெடுப்பில் ரிஷி சுனக் 137 வாக்குகளையும், லிஸ் டிரஸ் 113 வாக்குகளையும், பென்னி மோர்டான்ட் 105 வாக்குகளையும் பெற்றனர். விதிமுறைப்படி, கடைசி இடம் பிடித்த பென்னி மோர்டான்ட் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து, ரிஷி மற்றும் லிஸ் ஆகிய இருவரும் பிரச்சாரம் செய்ய இருக்கின்றனர். இதனையடுத்து பிரிட்டனின் புதிய அதிபரை கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள். செப்டெம்பர் 5 ஆம் தேதி, இந்த முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை நடந்த வாக்கெடுப்பில் ரிஷி தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடைபெற இருக்கும் இறுதி சுற்று வாக்கெடுப்பில் ரிஷி வெற்றிபெறும் பட்சத்தில் பிரிட்டன் பிரதமராகும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமை ரிஷிக்கு கிடைக்கும்.

மற்ற செய்திகள்
