இந்தப் பொங்கலைக் கொண்டாட உங்களுக்கு இருக்கும் இரண்டே வாய்ப்பு இவை மட்டும் தான்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அடுத்தவாரம் பொங்கல். வழக்கமாக இந்நேரமெல்லாம் தமிழகத்தில் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியிருக்கும். ஆனால், கொரோனாவைரஸ் கொண்டாட்டங்களுக்கு குண்டு வைத்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். பொதுவாக பண்டிகை தினங்களில் நாம் மேற்கொள்ளும் அத்தனை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் பொடிமாஸ் ஆக்கிவிட்டது ஒமிக்ரான்.

ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன்
தமிழகத்தில் தீவிரமாக பரவிவரும் கொரோனா காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இதனால், வரும் வார விடுமுறைகளின்போதே சொந்த ஊருக்குத் திரும்பலாம் என மக்கள் போட்டிருந்த பிளான்களும் தற்போது கேள்விக்குறியாகியுள்ளன.
வராமல் போன வலிமை
பொங்கலுக்கு திரைக்கு வரவிருந்த ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம், வலிமை ஆகிய முன்னணிப் படங்களின் ரிலீசையும் கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆக, பொங்கல் விடுமுறையில் புதுப்படம் பார்க்க தியேட்டருக்குச் செல்லும் பிளானும் ஒரே ஓ சம்போ தான்.
கடற்கரைகளில் மக்களுக்கு அனுமதி கிடையாது
வழக்கமாக பொங்கல் விடுமுறைகளில் கானும் பொங்கலன்று சென்னை உள்ளிட்ட நகரங்களில் வசிக்கும் மக்கள் கடற்கரைகளில் லட்சக்கணக்கில் கூடுவது வழக்கம். தமிழக அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளில் மக்கள் கடற்கரைக்குச் செல்லத் தடை விதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பறம் என்ன? இந்தப் பிளானும் முடிஞ்சது.
கேளிக்கைப் பூங்காக்களுக்கும் பூட்டு
தமிழகத்தில் உள்ள பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Parks / Amusement Parks) செயல்படுவது தடை செய்யப்பட்டுள்ளதால், விடுமுறை நாட்களில் அந்தப் பக்கம் செல்லலாம் என நினைத்திருந்தால் அதை மறந்துவிடவும்.
சரி, என்னதான் செய்வது?
இந்த பொங்கல் விடுமுறையில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில், பொழுது போக்கு இடங்களுக்குச் செல்வதற்கான வாய்ப்புகளே தென்படவில்லை. ஆனால், ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்குச் செல்வது குறித்து எவ்வித தடையும் இதுவரையில் விதிக்கப்படவில்லை. இருப்பினும் இதே நிலை வரும் நாட்களிலும் இதே நிலை தொடருமா? என்பதற்கு இப்போது பதில் சொல்ல முடியாது.
கிராமங்களில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படவில்லை. அங்கே உங்களது பொங்கல் விடுமுறைகளை பாதுகாப்பாகக் கொண்டாடலாம். இருப்பினும் ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரி, என்னதான் செய்யலாம் என யோசித்தால், வீட்டில் செய்யும் பொங்கலை சுவைத்துக்கொண்டே அண்ணாத்த படம் பார்ப்பதே இந்தப் பொங்கலுக்கு உங்களுக்கும் உங்களது உடல்நிலைக்கும் பாதுகாப்பாக அமையும் போலிருக்கிறது.

மற்ற செய்திகள்
