'அவர் உயிரோட இருக்காரான்னு கூட தெர்ல".. 31 வருஷத்துக்கு முன்னாடி வெளிநாடு சென்ற கணவனை மீட்க போராடிய மனைவி.. போலீஸ் அதிகாரியின் நெகிழ வைக்கும் முயற்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேலைக்காக பஹ்ரைன் சென்ற தமிழர் ஒருவர் 31 வருடங்களுக்கு பிறகு தனது குடும்பத்தினருடன் இணைந்துள்ளார். இதற்கு மிகவும் உதவிகரமாக இருந்த காவல்துறை அதிகாரிக்கு குடும்பத்தினர் ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிரிவு
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் பச்சை முத்து. இவர் கடந்த 1991 ஆம் ஆண்டு வேலைக்காக பஹ்ரைன் சென்றிருக்கிறார். அங்கு சென்ற கொஞ்ச நாளிலேயே தனது குடும்பத்தினரை அவரால் தொடர்பு கொள்ள முடியாமல் போயிருக்கிறது. இதனையடுத்து பச்சைமுத்துவின் குடும்பத்தினர், தவித்துப்போயிருக்கிறார்கள். தனது கணவரை மீட்டு கொடுக்கும்படி பச்சைமுத்துவின் மனைவி பல உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்திருக்கிறார். ஆனாலும், எவ்வித பயனும் கிட்டவில்லை.
இதனிடையே சமீபத்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் பஹ்ரைன் சென்றிருக்கிறார். அப்போது அவர் எதேச்சையாக பச்சைமுத்துவை பார்த்திருக்கிறார். இதுகுறித்து உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார் அந்த நபர். இதனால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
உதவி
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் எஸ்பியாக இருந்த செல்வகுமாரை சந்தித்து, தனது கணவரை மீட்டுக்கொடுக்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார் பச்சை முத்துவின் மனைவி. இதனை தொடர்ந்து செல்வகுமார் பஹ்ரைனில் உள்ள அன்னை தமிழ் மன்ற அதிகாரிகளை தொடர்புகொண்டு இதுபற்றி விளக்கியுள்ளார். மேலும், பச்சைமுத்துவை உடனடியாக கண்டுபிடிக்கும்படியும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், அன்னை தமிழ் மன்றத்தின் நிர்வாகியான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செந்தில் தலைமையிலான குழுவினர் பச்சை முத்துவை தேடி கண்டுபிடித்திருக்கின்றனர். இதனையடுத்து, அவரை இந்தியா அனுப்பும் பணியில் இறங்கியுள்ளது அன்னை தமிழ் மன்றம். இது குறித்து பஹ்ரைனில் உள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், பச்சைமுத்துவுக்கு அவசர பாஸ்போர்ட் வழங்கியுள்ளது தூதரகம்.
ஆனந்த கண்ணீர்
இதனையடுத்து அவர் சென்னை திரும்பியிருக்கிறார். அவரை காண அவரது குடும்பத்தினர் ஆர்வத்தோடு காத்திருந்த நிலையில், பச்சைமுத்து கலங்கிய கண்களுடன் அவர்களை சந்தித்திருக்கிறார். தனது மகனை கட்டியணைத்தபடி அழுத பச்சைமுத்து, தன்னுடைய மகன் 2 வயது இருந்தபோது தான் பஹ்ரைன் சென்றதாகவும் தற்போது அவருக்கு 33 வயது ஆகிறது என்றும் உருக்கத்துடன் குறிப்பிட்டார்.
இந்நிலையில், பச்சை முத்துவை மீண்டும் தமிழகம் அழைத்துவர உதவிய எஸ்பி செல்வகுமார், கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த நிலையில் ஏற்பட்ட கலவரத்தின்போது காயமடைந்தார். இதனையடுத்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
