KALLAKURICHI: இறந்த மாணவியின் தாய் எழுப்பிய கேள்விகளும்.. பள்ளி நிர்வாகத்தின் விளக்கமும்.. முழு விபரம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது தாய் எழுப்பிய கேள்விகளுக்கு பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.
![Kallakurichi school management response Student mother questions Kallakurichi school management response Student mother questions](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/kallakurichi-school-management-response-student-mother-questions.png)
சோகம்
கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுதியில் தங்கி பயின்றுவந்த அந்த மாணவி சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்ததாக பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, கடந்த ஆண்டுகளில் பல மாணவிகள் மரணமடைந்திருப்பதாகவும் இதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை - சேலம் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் மாணவியின் உறவினர்கள் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து, பள்ளியை நிரந்தமாக மூடக்கோரி நேற்று காலை பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் பள்ளி வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனத்தையும் போராட்டக்காரர்கள் மறித்ததால் கள்ளக்குறிச்சியே பரபரப்பாகியது. இதனையடுத்து 400 போலீஸ் அதிகாரிகள் அங்கே குவிக்கப்பட்டனர்.
கேள்விகள்
இந்நிலையில், உயிரிழந்த மாணவியின் தாய் செல்வி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதுகுறித்து கண்ணீருடன் பேசிய அவர் தனது மகளது உடல் தன்னிடம் தெரிவிக்கப்படாமலேயே பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் அது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மாணவி கீழே விழுந்த இடத்தில் இருந்த தடயங்கள் அழிக்கப்பட்டதாகவும், சிசிடிவி பதிவுகள் மற்றும் மாணவியின் பொருட்களை பார்க்க அனுமதி வழங்கப்படவில்லை என செல்வி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், மாணவி கீழே விழுந்த உடன் காவல்துறைக்கு தெரிவிக்காமல், ஆம்புலன்ஸை அழைக்காமல் பள்ளியின் வாகனத்திலேயே மாணவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
விளக்கம்
இதனிடையே பள்ளியின் செயலாளர் சாந்தி ரவிக்குமார் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அப்போது பேசிய அவர்," மாணவி உயிரிழந்த நாள் முதல் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிவருகிறோம். சிசிடிவி பதிவுகள் உட்பட அனைத்து ஆவணங்களும் காவல்துறை அதிகாரிகளிடத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மாணவியின் தாய் எங்களை சந்திக்க முயற்சித்ததாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. காவல்துறை விசாரணையில் இருந்ததால் அவரை பார்க்க முடியவில்லை. இதுதான் உண்மை. இதனிடையே ஏற்பட்ட கலவரத்தால் பள்ளி சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இங்கு படிக்கும் 3500 மாணவர்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் அனைத்தும் தீக்கிரைக்கப்பட்டுள்ளன. மேலும் மாணவர்களுக்கு உதவக்கூடிய மேஜை, நாற்காலி ஆகிவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற வன்முறையை ஏன் தூண்டினார்கள்? என்பது தெரியவில்லை இதனால் இங்கு பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது" என்றார்.
இதனிடையே, இதுவரையில் 30 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)