தமிழகத்தில் இன்றுமுதல் தென்மேற்கு பருவமழை துவக்கம்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை அதிகம் பெய்யும்? வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இன்றுமுதல் தென்மேற்கு பருவமழை துவங்குவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Also Read | "தர்மசங்கடம் வேணாம்".. கட்சியினருக்கு உதயநிதி கோரிக்கை.. அவரே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.!
தென்மேற்கு பருவமழை
ஜூன் முதல் செப்டம்பர் ஆகிய மாதங்களில் வட மற்றும் மத்திய இந்தியாவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும். இதனை ஈடுகட்ட இந்திய பெருங்கடல் பகுதியில் இருந்து காற்றுவீசும். அப்போது, நீர்த்துளிகளை கொண்டுள்ள காற்று மலைகளின் மீது மோதி குளிர்வடைந்து மழையாகப் பெய்யும். கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள பகுதிகள், கொங்கன் கடற்கரை ஆகிய இடங்களில் இந்த பருவகாலத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில்
பொதுவாக கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி, தென்மேற்கு பருவமழை துவங்கும். ஆனால், இம்முறை மூன்று நாட்களுக்கு முன்பாகவே மே 29 ஆம் தேதி, பருவமழை துவங்கிவிட்டது. இந்நிலையில் இன்று தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இதன்மூலம், நெல்லை, திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் அதிக மழை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தென்மேற்கு பருவமழையின் மூலம் 39.34 செ.மீ. மழை கிடைத்திருந்த நிலையில், நடப்பாண்டிலும் இயல்பான மழையே பொழியும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
4 நாட்களுக்கு மழை
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைபொழியும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்துப் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன்," கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், தமிழகம், காரைக்கால் மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டமாக காணப்படும். ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்" என்றார்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, கேரளா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மாலத்தீவு பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். இதனால் இப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

மற்ற செய்திகள்
